'பயப்படாதீங்க பிரதர்.. நீங்கதான் கேப்டன்'.. தனஞ்செயாவை ஸ்லெட்ஜிங் செய்து அலறவிட்ட சர்ஃபராஸ் கான்
'பயப்படாதீங்க பிரதர்.. நீங்கதான் கேப்டன்'.. தனஞ்செயாவை ஸ்லெட்ஜிங் செய்து அலறவிட்ட சர்ஃபராஸ் கான்
கொழும்பு: இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில், காயம் காரணமாக விலகிய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டிற்கு மாற்று வீரராகக் களம் இறங்கிய சர்ஃபராஸ் கான், தனது ஸ்லெட்ஜிங் மூலம் ஆட்டத்தின் போக்கையே மாற்றியுள்ளார். அவரது தொடர்ச்சியான பேச்சால் இலங்கை கேப்டன் தனஞ்செயா டி சில்வா மற்றும் விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். தோள்பட்டை காயம் காரணமாக ரிஷப் பண்ட் மைதானத்தில் விளையாடாத நிலையில், சர்ஃபராஸ் கான் மாற்று பீல்டராக ஷார்ட் லெக் திசையில் நிறுத்தப்பட்டார்.
போட்டியின் 35 வது ஓவரை இந்திய சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதர் வீசத் தயாரானார். அப்போது சைட் ஸ்கிரீனுக்குப் பின்னால் ஏற்பட்ட அசைவு காரணமாக இலங்கை கேப்டன் தனஞ்செயா டி சில்வா விளையாடாமல் தடுத்தார். இதனால் ஷார்ட் லெக் திசையில் நின்று கொண்டிருந்த சர்ஃபராஸ் கான், "அங்கே ஒன்றும் இல்லை பிரதர். நீங்கள் சும்மா நேரத்தை வீணடிக்கிறீர்கள். பயப்படாதீர்கள், நீங்கள் தான் கேப்டன், நேராகப் பார்த்து விளையாடுங்கள்" என்று ஸ்டம்ப் மைக்கில் கேட்கும் வகையில் ஆக்ரோஷமாகப் பேசினார்.
சர்ஃபராஸின் இந்த சீண்டலால் கவனச்சிதறல் அடைந்த தனஞ்செயா டி சில்வா, அதே ஓவரின் ஐந்தாவது பந்தில் மானவ் சுதர் வீசிய சுழலில் எட்ஜ் ஆகி அவுட்டானார். பந்து விக்கெட் கீப்பர் துருவ் ஜூரலின் கிளவுஸில் பட்டு நழுவிய போது, ஸ்லிப் திசையில் நின்ற கே.எல்.ராகுல் அதை இரண்டு முறை தட்டிப் பிடித்து அபாரமாக கேட்ச் செய்தார். தனஞ்செயா 14 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனைத் தொடர்ந்து பசிந்து சூரியபண்டாரா மற்றும் நிரோஷன் டிக்வெல்லா விக்கெட்டுகளையும் இந்தியா வீழ்த்தியது. டிக்வெல்லா களம் இறங்கிய போது முகமது சிராஜ் ஷார்ட்-பிட்ச் பந்துகளை வீசினார். முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் இதே வியூகம் வேலை செய்ததால் சிராஜ் இதனை மீண்டும் பயன்படுத்தினார். அப்போதும் சர்ஃபராஸ் கான் அவரைத் தொடர்ந்து ஸ்லெட்ஜிங் செய்து கொண்டே இருந்தார். இறுதியில் சிராஜ் வீசிய பந்தில் டிக்வெல்லா விக்கெட் கீப்பர் துருவ் ஜூரலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
முன்னதாக இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை 9 விக்கெட் இழப்பிற்கு 503 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்திருந்தது. தேவ்தத் படிக்கல் (117 ரன்கள்) மற்றும் துருவ் ஜூரல் (115 ரன்கள்) ஆகியோர் சதம் விளாசியிருந்தனர். தற்போது சர்ஃபராஸின் இந்த சாமர்த்தியமான ஆட்டம் இந்திய அணிக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியது.