மதுரை
மதுரை - கான்பூர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ரயில் சேவைகள் நீட்டிப்பு
மேற்கு ரயில்வே அறிவிப்பின்படி, அகமதாபாத் - மங்களூரு சந்திப்பு சிறப்பு ரயில் (09424) மற்றும் மங்களூரு சந்திப்பு - அகமதாபாத் சிறப்பு ரயில் (09423) ஆகியவற்றின் சேவையும் தலா 13 முறை நீட்டிக்கப்பட்டுள்ளன.
Published : August 29, 2026 at 9:49 AM IST
மதுரை: பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, மதுரை - கான்பூர் இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ரயில்களின் சேவைகளின் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வட மத்திய ரயில்வே அறிவிப்பின்படி, கான்பூர் சென்ட்ரல் - மதுரை சிறப்பு ரயில் (01925) புதன்கிழமைகளில் தொடர்ந்து இயக்கப்படும். இதன் சேவை காலம் 02.09.2026 முதல் 25.11.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் மொத்தம் 13 சேவைகள் இயக்கப்படும்.
அதேபோல், மதுரை - கான்பூர் சென்ட்ரல் சிறப்பு ரயில் (01926) சனிக்கிழமைகளில் இயக்கப்படும். இதன் சேவை காலம் 05.09.2026 முதல் 28.11.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதுடன், மொத்தம் 13 சேவைகள் இயக்கப்பட உள்ளன.
இந்த சிறப்பு ரயில்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள அதே நேர அட்டவணை மற்றும் நிறுத்தங்களுடன் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேற்கண்ட இரு சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. பயணிகள் முன்பதிவு செய்து பயணத்தை திட்டமிடலாம்.
சிறப்பு ரயில்களின் சேவை காலம் நீட்டிப்பு
பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்களின் சேவை காலத்தை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நீட்டிக்கப்பட்ட சேவைகள் ஏற்கனவே உள்ள நேரங்கள், நிறுத்தங்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட பெட்டிகள் அமைப்புடன் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில்களின் சேவைகள் குறித்து விரிவான விவரங்களைத் தெரிந்துகொள்ள ‘ரயில் ஒன்’ செயலி அல்லது ஐ.ஆர்.சி.டி.சி தளத்தை பயனர்கள் பார்வையிடலாம்.
முன்பதிவு விவரங்கள் வெளியீடு
தற்போது, 06126/06125, 06028/06027, 06030/06029, 06166/06165, 06070/06069 ஆகிய ரயில்களுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளது. 06059/06060 மற்றும் 06045/06046 ரயில்களுக்கான முன்பதிவு ஆகஸ்ட் 29-ஆம் தேதி காலை 8 மணிக்கு தெற்கு ரயில்வே சார்பில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் பயணிகள் முன்பதிவு செய்து பயணத்தை முன்னரே திட்டமிட்டுக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.