''முன்வரிசையில் நடிகை... வெட்கமே இல்லையா முதல்வரே?''
''முன்வரிசையில் நடிகை... வெட்கமே இல்லையா முதல்வரே?'' - முரசொலி நாளிதழ் கடும் தாக்கு
''சுதந்திர தின விழாவுக்கு ஒரு நடிகையை அழைத்துவந்து, அவருக்கு ‘சல்யூட்’ அடிப்பதை விஜய் ரசிகர்களாலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லையே... மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்?'' - முரசொலி நாளிதழ்.
கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஜார்ஜ் கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் விஜய் தேசியக் கொடியை ஏற்றியிருந்தார்.
இதை திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் இன்று விமர்சித்து தலையங்கம் எழுதியிருக்கின்றனர்.
முரசொலியின் அந்தத் தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது, ''சுதந்திர தினத்தன்று கொடி ஏற்றிய முதலமைச்சர் விஜய்யின் மானம் காற்றில் பறந்தது. வெட்கமோ, கூச்சமோ இல்லாமல் ஒரு நடிகையை முன்வரிசையில் உட்கார வைத்து, இருவரும் மாறி மாறி சல்யூட் வைத்துள்ள காட்சியை அவருக்கு வாக்களித்தவர்களாலேயே சகிக்க முடியவில்லை.
அசிங்கத்தையும் அருவருப்பையும் பட்டவர்த்தனமாகச் செய்வதன்மூலமாக அதனை நியாயப்படுத்த நினைக்கிறவர்தான் இன்று தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக வந்துள்ளார்.
மூன்றே மாதங்களில் அவருக்கு தனது செல்வாக்கு நிலைக்குமா, பதவி நிலைக்குமா என்ற பயம் வந்துவிட்டது. அதையும் அவர் உரையே காட்டிக் கொடுத்துவிட்டது.
சுதந்திர தினத்தன்று விடுதலைப் போராட்ட வரலாறுகளை ஊடகங்கள் வெளியிடும். ஆனால் இம்முறை நடிகை ஒருவருடன் முதலமைச்சர் இதுவரை ஐந்து முறை ஒன்றாக வெளியில் வந்துள்ளார் என்று வரலாறு போடும் வேலையைப் பார்க்கிறோம்'' எனக் கூறப்பட்டிருக்கிறது.