முழு கடன் தள்ளுபடி செய்யாவிட்டால் சென்னையில் தற்கொலை செய்வோம்: அய்யாக்கண்ணு பேட்டி
முழு கடன் தள்ளுபடி செய்யாவிட்டால் சென்னையில் தற்கொலை செய்வோம்: அய்யாக்கண்ணு பேட்டி
திருச்சி: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு திருச்சியில் நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாடு முதல்வரால் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து நிலவரத்தை கூறி கர்நாடகாவிடம் தண்ணீர் பெற்றுத்தர முடியவில்லை. கர்நாடக அரசிடமும் பேச முடியவில்லை. இந்நிலையில், தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி முற்றிலுமாக பொய்த்து போனது.
அடுத்து சாகபடி செய்ய வேண்டிய சம்பா சாகுபடிக்கு நாற்றுவிடுவதற்குகூட இதுவரை தண்ணீர் வந்து சேர்ந்தபாடில்லை. எனவே, தமிழ்நாடு அரசு கடந்த 2021 முதல் 2024 வரை விவசாயிகள் வாங்கிய அனைத்து வேளாண் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். நடப்பாண்டு சிறு, குறு விவசாயிகள் மட்டுமல்லாது பெரு விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அவ்வாறு கடன் தள்ளுபடி செய்யாவிட்டால், விவசாயிகளான நாங்கள் சென்னை சென்று அங்கேயே தற்கொலை செய்துகொள்வோம்.
வெள்ள அபாயம் ஏற்படும் சூழலில் மட்டும் காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டு, சுப்ரீம் கோர்ட் மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் அளித்த தீர்ப்பின்படி மாதந்தோறும் திறக்க வேண்டிய தண்ணீரை, தமிழ்நாட்டுக்கு தர மறுக்கும், அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்பட்டு வரும் கர்நாடக அரசு, தமிழ்நாட்டுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வரும் செப்.4 அன்று டெல்லி சென்று குடியரசு தலைவரை சந்தித்து மனு அளிக்கவுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.