📅 Sunday, 23 August 2026 IST | ஆவணி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 23, 2026 05:04 PM

நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றார்.. சீசனின் சிறந்த தூரம்.. லோசான் டைமண்ட் லீக் தொடரில் இரண்டாம் இடம்

நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றார்.. சீசனின் சிறந்த தூரம்.. லோசான் டைமண்ட் லீக் தொடரில் இரண்டாம் இடம்

நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றார்.. சீசனின் சிறந்த தூரம்.. லோசான் டைமண்ட் லீக் தொடரில் இரண்டாம் இடம்

லோசான்: லோசான் நகரில் நடைபெற்ற 2026 டைமண்ட் லீக் தடகளப் போட்டியில், இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 88.05 மீட்டர் தூரம் வீசி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். ஈட்டி எறிதல் போட்டியில் இந்த சீசனின் சிறந்த தூரத்தை நீரஜ் சோப்ரா இதில் பதிவு செய்துள்ளார். அடுத்த மாதம் ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு முன்னதாக, இந்தச் சிறப்பான செயல்பாடு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.

வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கையின் இளம் வீரர் ருமேஷ் பதிரகே 88.14 மீட்டர் தூரம் வீசி முதலிடத்தைப் பிடித்தார். நீரஜ் சோப்ராவை விட வெறும் 9 சென்டிமீட்டர் மட்டுமே அதிகமாக வீசி அவர் தங்கம் வென்றார். கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 86.69 மீட்டர் தூரம் வீசி மூன்றாவது இடத்தையும், கேஷோர்ன் வால்காட் நான்காவது இடத்தையும் பிடித்தனர்.

கடந்த சில மாதங்களாகக் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த நீரஜ் சோப்ராவுக்கு இந்தப் போட்டி ஒரு சிறந்த பதிவாக அமைந்துள்ளது. கடந்த ஜூன் 2025 க்குப் பிறகு அவர் 88 மீட்டருக்கும் அதிகமான தூரத்தை எட்டியுள்ளது இதுவே முதல் முறையாகும். தனது பயிற்சியாளர் குழுவில் மாற்றங்கள் செய்த நிலையில், நீரஜ் சோப்ரா பழைய ஃபார்முக்குத் திரும்பி இருக்கிறார்.

இலங்கையின் 23 வயதான இளம் வீரர் ருமேஷ் பதிரகே 2026 ஆம் ஆண்டில் நீரஜ் சோப்ராவைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக வீழ்த்தியுள்ளார். இதற்கு முன்பு தோஹா டைமண்ட் லீக் மற்றும் கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளிலும் பதிரகே முதலிடத்தைப் பிடித்திருந்தார். இப்போட்டியிலும் அவர் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்துள்ளார்.

இந்தப் போட்டிக்குப் பிறகு பேசிய நீரஜ் சோப்ரா, "வெறும் 9 சென்டிமீட்டர் வித்தியாசத்தில் தங்கம் தவறியது. ஆனால், இந்த சீசனின் சிறந்த தூரமான 88 மீட்டரை எட்டியதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒவ்வொரு போட்டியிலும் எனது பழைய ஆட்டத்திற்குத் திரும்பி வருவதை உணர முடிகிறது. ஈட்டி எறியும் போது நான் மிகவும் நிதானமாக உணர்ந்தேன். இந்த ஆட்டம் எனக்கு திருப்தியளிக்கிறது" என்று தெரிவித்தார்.

அடுத்ததாக ஆகஸ்ட் 27 அன்று சூரிச் டைமண்ட் லீக் மற்றும் பிரஸ்ஸல்ஸ் டைமண்ட் லீக் இறுதிப்போட்டிகள் நடைபெறவுள்ளன. தொடர்ந்து செப்டம்பர் 11 முதல் 13 வரை அல்டிமேட் அத்லெடிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியும் நடைபெற உள்ளது. இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் மீண்டும் தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது.