'நீட்' தேர்வு சமூக நீதிக்கு எதிரானது: காங்., அமைச்சர் ராஜேஷ்குமார் கருத்து
சென்னை: ''நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது,'' என, காங்கிரசைச் சேர்ந்த அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்தார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி:
'நீட்' வினாத்தாள் கசிவு முறைகேடு குறித்து, மாநில வாரியாக மாணவர்களிடம் கலந்துரையாடி, அவர்களின் கருத்துகளை காங்., - எம்.பி., ராகுல் கேட்டறிந்து வருகிறார். ராஜஸ்தான், உத்தரகண்ட் மாநிலங்களில் ராகுல் கலந்துரையாடிய போது, பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டு வந்து, கருத்துகளை தெரிவித்தனர்.
தமிழகத்தில் நீட் தேர்வு என்பது சமத்துவம், சமூக நீதி, சுயாட்சிக்கு எதிரானது. கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து, பயிற்சி பெறுவது, சாமானிய மக்களுக்கு சாதாரண விஷயமல்ல. கிராமப்புற மாணவர்களுக்கும், நகர்ப்புற மாணவர்களுக்கும் வித்தியாசம் இருக்கக்கூடாது.
எனவே, நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க, மிகப்பெரிய போராட்டத்தை, நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் முன்னெடுத்து உள்ளது. தமிழகத்தில் மாணவர்களை ஒருங்கிணைத்து, காங்கிரஸ் தொடர்ந்து போராடும். இவ்வாறு அவர் கூறினார்.