நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மாணவர் சேர்க்கை! பட்ஜெட்டில் திட்டவட்டமாக சொன்ன விஜய் அரசு
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மாணவர் சேர்க்கை! பட்ஜெட்டில் திட்டவட்டமாக சொன்ன விஜய் அரசு
சென்னை: இன்றைய தினம் தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்தும் அவர் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக நீட் தேர்வை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருவதாகவும் 12ம் வகுப்பு தேர்வு அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு பட்ஜெட்டை இன்றைய தினம் நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். கடந்த மார்ச் மாதம் அப்போதைய திமுக அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்த நிலையில், புதிதாக அமைந்துள்ள தவெக அரசு இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தது. நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அப்போது கல்வி துறை சார்ந்து பல்வேறு அறிவிப்புகளை நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார். தூய்மை பணிகளுக்கு சூப்பர் கிளீன், சூப்பர் ஸ்கூல் திட்டம் அமல்படுத்தப்படும் என கூறிய நிதியமைச்சர் மரிய வில்சன், பள்ளிகளில் சூப்பர் கிளீன் சூப்பர் கேம்பஸ் திட்டத்துக்கு ரூ.139 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார். மேலும், சூப்பர் கிளீன் , சூப்பர் கமே்பஸ் திட்டம் முதற்கட்டமாக 10,000 பள்ளிகளில் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பள்ளி கல்வித்துறைக்கு மொத்தமாக ரூ.44,527 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.
மேலும், "நீட் தேர்வை தொடர்ந்து தமிழக அரசு எதிர்த்து வருகிறது. நீட் தேர்வில் தேசியளவில் நடந்த குளறுபடிகள், வினாத்தாள் லீக் உள்ளிட்ட பிரச்சினைகள் இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தை பாதிக்கிறது. எனவே, நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும். 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடத்தவும், நீட் தேர்வை ரத்து செய்யவும் மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்" என்றார்.
மேலும், கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி திட்டம் என்ற திட்டத்தையும் மரிய வில்சன் அறிவித்தார். கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி திட்டம் திட்டத்துக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் உயர்கல்வித்துறைக்கு ரூ.8,393 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மரிய வில்சன் அறிவித்தார்.