ரன் ஓட முக்கி முனகும் சீனியர் வீரர்கள்.. பின்னணியில் நடந்த ஏமாற்று வேலை.. கண்டுபிடித்த பிசிசிஐ
ரன் ஓட முக்கி முனகும் சீனியர் வீரர்கள்.. பின்னணியில் நடந்த ஏமாற்று வேலை.. கண்டுபிடித்த பிசிசிஐ
மும்பை: இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் உடற்தகுதி தொடர்ந்து குறைந்து வருவது குறித்து, அணியின் பிசியோதெரபிஸ்ட் கமலேஷ் ஜெயினிடம் பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகம் அதிரடி விசாரணை நடத்தியுள்ளதாகவும், அதில் பல தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து டி20 தொடரின் போது இந்திய வீரர்கள் அடிக்கடி தசைப்பிடிப்பால் அவதிப்பட்டனர். மேலும், மைதானத்தில் சில மூத்த வீரர்களின் சுறுசுறுப்பு மிகவும் குறைவாக இருந்ததோடு, நீண்ட நேரம் பேட்டிங் செய்யும்போது விக்கெட்டுகளுக்கு இடையே ஓடுவதிலும் அவர்கள் தடுமாறினர். இதற்கிடையே, பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் (CoE) மருத்துவக் குழு, வீரர்களின் உடற்தகுதித் திட்டத்தில் சில அதிரடி மாற்றங்களைச் செய்ய முடிவு செய்துள்ளது.
முன்னதாக, உடற்பயிற்சி பயிற்சியாளர் அட்ரியன் லெ-ரக்ஸ் பொறுப்பேற்ற பிறகு, யோ-யோ தேர்வுக்குப் பதிலாக 'பிரான்கோ' தேர்வு முதன்மையான உடற்தகுதி தேர்வாக மாற்றப்பட்டது. ஆனால், இந்திய வீரர்கள் இந்தத் தேர்வுக்குப் பழகவில்லை என்றும், மூத்த வீரர்களுக்கு உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற எளிமையான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது அனைத்து வீரர்களுக்கும் ஒரே மாதிரியான அளவுகோல் கடைபிடிக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
மேலும், இந்திய அணி நிர்வாகத்தின் தேவைகளுக்காக ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி போன்ற வீரர்களைப் போதிய உடற்தகுதி இன்றி அவசரமாகத் தேர்வு செய்ய மருத்துவக் குழு அனுமதித்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தற்போது உடற்தகுதிக்கான அடிப்படை இலக்காக பிரான்கோ தேர்வில் 5.15 முதல் 5.20 நிமிடங்களுக்குள் குறிப்பிட்ட பயிற்சிகளை முடிக்க வேண்டும் என்றும், 2 கிலோமீட்டர் ஓட்டத்தை 9 முதல் 10 நிமிடங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், "வீரர்களின் செல்வாக்கை பார்க்காமல் உடற்தகுதி சரியாக இல்லையென்றால் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்று பிசியோ கமலேஷ் ஜெயினிடம் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதற்கிடையே, இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டிக்குப் பிறகு ஹர்ஷித் ராணா அணியிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணமும் வெளிவந்துள்ளது. அவர் இங்கிலாந்து தொடருக்குத் தேர்வாகும் போது 97 கிலோ எடையுடன் இருந்துள்ளார் ஹர்ஷித் ராணா. அதாவது, உடற்தகுதிக்கான எடையை விட 4 கிலோ அதிகமாக இருந்தார். தற்போது அவரது எடை 94 கிலோவாகக் குறைக்கப்பட்ட பிறகே அடுத்த வாரம் அவர் அணிக்குத் திரும்ப அனுமதிக்கப்பட உள்ளார்.