📅 Tuesday, 28 July 2026 IST | ஆடி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports July 28, 2026 02:33 PM

“ரோஹித், கோலிக்கு 2 போட்டி எல்லாம் ரொம்ப அதிகம்.. அவர்கள் சீக்கிரம்..”.. தீப் தாஸ்குப்தா பேச்சு

“ரோஹித், கோலிக்கு 2 போட்டி எல்லாம் ரொம்ப அதிகம்.. அவர்கள் சீக்கிரம்..”.. தீப் தாஸ்குப்தா பேச்சு

“ரோஹித், கோலிக்கு 2 போட்டி எல்லாம் ரொம்ப அதிகம்.. அவர்கள் சீக்கிரம்..”.. தீப் தாஸ்குப்தா பேச்சு

மும்பை: 2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கு இன்னும் 15 மாதங்களே உள்ள நிலையில், ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஃபார்முக்கு வர ஒன்று அல்லது இரண்டு போட்டிகள் வரை எடுத்துக்கொள்ளக் கூடாது என்று முன்னாள் விக்கெட் கீப்பர் தீப் தாஸ்குப்தா எச்சரித்துள்ளார்.

சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்தது. இந்தத் தொடரில் ரோஹித் சர்மா 3 இன்னிங்ஸ்களில் 175 ரன்களும், விராட் கோலி 144 ரன்களும் எடுத்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆடிய நிலையில், அவர்களின் ஆட்டம் கலவையாகவே இருந்தது. ரோஹித் சர்மா இரண்டு போட்டிகளில் சொதப்பிய நிலையில் மூன்றாவது போட்டியில் சதம் அடித்தார்.

இது குறித்துத் தனது யூடியூப் பக்கத்தில் பேசிய தீப் தாஸ்குப்தா, "ரோஹித் மற்றும் கோலி போன்ற சீனியர் வீரர்கள் ஒரு தொடரின் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடத் தொடங்க வேண்டும்" என்றார்.

மேலும் அவர் பேசுகையில், "நீண்ட ஓய்வுக்குப் பிறகு ஒருநாள் போட்டிக்குத் திரும்பும் போது, தங்களது ஃபார்மை கண்டறிய ஒன்று அல்லது இரண்டு போட்டிகளை அவர்கள் வீணடிக்க முடியாது. இங்குதான் பயிற்சியாளர்கள் மற்றும் உதவி ஊழியர்களின் பங்கு முக்கியமானது. வீரர்களிடம் பேசி, அவர்கள் முதல் போட்டியிலேயே தங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தத் தேவையான சூழ்நிலையை அவர்கள் உருவாக்க வேண்டும். அணியில் அவர்களின் இடம் குறித்து எந்த விவாதமும் தேவையில்லை. அவர்களின் திறமைக்கு நிச்சயம் இடம் உண்டு" என்று கூறினார்.

ரோஹித் மற்றும் கோலி தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதால், அவர்களின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் அதிகமாக எழுவதாகத் தெரிவித்த அவர், "நீங்கள் பல வடிவ கிரிக்கெட்டில் விளையாடும்போது, ஒரு போட்டியில் சொதப்பினாலும் மற்றொன்றில் எடுக்கும் ரன்கள் அதனை மறக்கச் செய்துவிடும். ஆனால் இவர்கள் ஒரேயொரு பார்மட்டில் மட்டும் விளையாடுவதால், ரசிகர்கள் இவர்களின் கடைசி இன்னிங்ஸை மட்டுமே நினைவில் வைத்திருப்பார்கள். இது அவர்களுக்கு ஒரு சவாலாக உள்ளது" என்றார்.

இந்திய அணி அடுத்ததாக செப்டம்பர் மாத இறுதியில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராகத் தனது சொந்த மண்ணில் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அப்போதும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஒவ்வொரு போட்டியிலும் ரன் குவிக்க வேண்டும் என்ற அழுத்தம் ஏற்படும்.