📅 Thursday, 03 September 2026 IST | ஆவணி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 03, 2026 12:00 PM

ரூ.3 லட்சம் லஞ்சம் பெற்ற சுற்றுச்சூழல் இன்ஜி., கைது

ரூ.3 லட்சம் லஞ்சம் பெற்ற சுற்றுச்சூழல் இன்ஜி., கைது

ஓசூர்: தனியார் கிரஷர் நிறுவனத்திற்கு அனுமதி வழங்க, 3 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் புருஷோத்தமன், 48, கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளராக புருஷோத்தமன் பணியாற்றி வருகிறார்.

இவரிடம், மத்துார் அருகே சிவம்பட்டியில் இயங்கும், 'கண்ணன் புளு மெட்டல்' என்ற கிரஷர் நிறுவனம், அனுமதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தது. இதற்கு, 15 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

பேரம் பேசி, நிறுவன உரிமையாளரான, சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்த பிரதாப், 41, என்பவரிடம், 10 லட்சம் ரூபாய் பேசி முடித்து, முதற்கட்டமாக, 3 லட்சம் ரூபாயும், சான்றிதழ் வழங்கியவுடன் மீத தொகையும் தர முடிவானது.

லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரதாப், மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் நேற்று புகார் செய்தார். இதன்படி, 3 லட்சம் ரூபாயை மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில், நேற்றிரவு புருஷோத்தமனிடம், பிரதாப் வழங்கினார். அதை பெற்ற போது, புருஷோத்தமன் கையும், களவுமாக பிடிபட்டார்.