ரயில் தட்கல் டிக்கெட் முன்பதிவில் முக்கிய மாற்றம்
ரயில் தட்கல் டிக்கெட் முன்பதிவில் முக்கிய மாற்றம் - ஆகஸ்ட் 1 முதல் அமல்
ஏசி முன்பதிவிற்கு அதிகபட்சமாக 10 டோக்கன்களும், சாதாரண படுக்கை முன்பதிவிற்கு அதிகபட்சமாக 15 டோக்கன்களும் வழங்கப்படும் எனவும் ரயில்வே தெரிவித்திருக்கிறது.
Published : July 29, 2026 at 11:14 AM IST
சென்னை: ரயில் நிலைய கவுண்டர்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கான புதிய நடைமுறை வரும் ஆகஸ்ட் 1 முதல் ரயில்வே துறை அமலுக்கு கொண்டுவர உள்ளது.
இந்தியாவின் மிக முக்கிய போக்குவரத்து சேவைகளில் ஒன்று ரயில்வே சேவை. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் மூலம் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். குறைந்த மற்றும் வெகு தூரப் பயணத்திற்கு ஏற்ப, இருக்கை, சாதாரண படுக்கை மற்றும் ஏசி படுக்கை வசதிகள் என பல்வேறு விதமான ரயில் சேவைகள் பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், பண்டிகை காலங்கள், அரசு விடுமுறை நாட்களுக்கு ஏற்ப சிறப்பு சேவைகளும், சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
முன்கூட்டியே பயணத்தை திட்டமிடுவோர் தடையின்றி பயணிக்கும் வகையில் 60 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது. நேரடியாக ரயில் நிலைய கவுண்டர்களுக்கு சென்றோ, ஐ.ஆர்.சி.டி.சி அல்லது ‘ரயில் ஒன்’ ஆகிய செயலிகள் மூலமாகவோ முன்பதிவு செய்யலாம்.
மேலும், கடைசி நேரத்தில் பயணத்தை திட்டமிடுவோருக்காகவும், எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வோருக்காகவும், தட்கல் டிக்கெட் பதிவு வசதியும் ரயில்வே துறையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
தட்கல் டிக்கெட் முன்பதிவு முறை
தட்கட் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்ய நினைப்போர், பயணத்திற்கு ஒரு நாளைக்கு முன்பு டிக்கெட் பதிவு செய்ய வேண்டும். ஏசி படுக்கை வசதியில் பயணிப்போருக்கு காலை 10 மணிக்கு தட்கெட் முன்பதிவு சேவை தொடங்கும். அதேபோல், சாதாரண படுக்கை வசதியில் பயணிப்போருக்கு காலை 11 மணிக்கு முன்பதிவு தொடங்கும். இந்த தட்கல் முன்பதிவு சேவை திறக்கப்பட்ட ஒருசில நிமிடங்களுக்குள் டிக்கெட்டை முன்பதிவு செய்துவிட வேண்டும். இல்லாவிட்டால் டிக்கெட் கிடைப்பது சிரமமாகிவிடும்.
இதில், டிக்கெட் கிடைக்காத பட்சத்தில் ப்ரீமியம் தட்கல் வசதி மூலம் டிக்கெட் பதிவு செய்யலாம். ஆனால், இதில் நேரம் செல்ல செல்ல ஒவ்வொரு நிமிடத்திற்கும் கட்டணம் ஏறிக்கொண்டே போகும்.
இதனால், பெரும்பாலானோர் தட்கல் டிக்கெட்டை பதிவு செய்ய ரயில் நிலைய கவுண்டர்களுக்கு செல்கின்றனர். இதனால் சேவை நேரங்களில் கூட்டம் அங்கு கூட்டம் அலைமோதுகிறது. இந்த சிக்கலை தவிர்க்கும் விதமாக ரயில்வே துறை புதிய நடைமுறையை அமல்படுத்த இருக்கிறது. அதன்படி, வரும் ஆகஸ்ட் 1 முதல் ரயில் நிலைய கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்வோருக்கு டோக்கன் வழங்கப்பட உள்ளது.
கவுண்டர்களில் தட்கல் டிக்கெட் பதிவு செய்வது எப்படி?
கடைசி நேரத்தில் கூட்டநெரிசலை தவிர்ப்பதற்காகவும், இடைத்தரகர்களின் தலையீட்டை கட்டுப்படுத்தவும் இந்த முறை அறிமுகப்படுத்தப்படுவதாக ரயில்வே துறை தெரிவித்திருக்கிறது.