SQ321 விமானம்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மீது வழக்கு
கடந்த 2024ஆம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூர் ஏர்லைன்சின் எஸ்கியூ321 விமானம் வானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென ஆட்டம் கண்டது.
இந்தக் கடுமையான அதிர்வால் ஜெஃப்ரி கிச்சன் என்னும் பிரிட்டிஷ் ஆடவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
ஆடவரின் மனைவி லிண்டா கிச்சனுக்கும் அந்த விமானத்தில் பயணம் செய்திருந்தார். அவருக்கும் முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டது.
விமானம் லண்டனிலிருந்து சிங்கப்பூர் வந்துகொண்டிருந்தது. மியன்மார் வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது திடீரெனக் கீழே இறங்கியதால் விமானத்தில் இருந்த பலருக்குக் காயம் ஏற்பட்டது.
இந்நிலையில், தன்னுடைய காயங்களுக்குச் சிறப்பு மருத்துவச் சிகிச்சை பெறுவதற்கான இழப்பீட்டைக் கோரி பிரிட்டிஷ் உயர் நீதிமன்றத்தில் லிண்டா, 74, வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
52 ஆண்டுகள் திருமண வாழ்க்கையைக் கண்ட கிச்சன் தம்பதி சிங்கப்பூர், இந்தோனீசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு ஆறு வாரச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் புறப்பட்டபோது இத்துயரச் சம்பவம் நிகழ்ந்தது.
நீதிமன்றத்தில் உள்ள வழக்கு குறித்துக் கருத்து தெரிவிக்க இயலாது எனச் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துவிட்டது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
இதற்கிடையே, பிரிட்டிஷ் நீதிமன்ற ஆவணங்களின்படி மேலும் ஏழு பயணிகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மீது சட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.