தி.மு.க., மாவட்ட பார்வையாளர்களாக அன்னியூர் சிவா, புதுச்சேரி சிவா நியமனம்
- சிறப்பு நிருபர் -
தி.மு.க., மாவட்ட பார்வையாளர்களாக அன்னியூர் சிவா, புதுச்சேரி சிவா உட்பட 76 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும், கட்சியை அமைப்பு ரீதியாக 110 மாவட்டங்களாக பிரித்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தி.மு.க., சீரமைப்புக்குழு அளித்த பரிந்துரையின்படி, கட்சி நிர்வாகத்தை மறு சீரமைத்து, தலைமைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இப்பணியை நேரடியாக மேற்பார்வையிடுவதற்காக வருவாய் மாவட்டம் தோறும், 2 பேர் வீதம் 76 பிரதிநிதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட செயலாளர்கள் நடத்தும் மாவட்ட செயற்குழு கூட்டங்கள் அனைத்தும் பிரதிநிதிகள் முன்னிலையில் நடத்தப்பட வேண்டும். பகுதி, நகரம், ஒன்றியம், பேரூராட்சி, கிளை நிர்வாகத்தில் மறுசீரமைப்பு தொடர்பான கருத்தினை, மாவட்டத்திற்கான பிரதிநிதிகளிடம் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரதிநிதிகளுடன், இன்று 2ம் தேதி மாலை 5:00 மணியளவில், கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
கட்சியின் மறுசீரமைப்புக்கு மாவட்ட மேற்பார்வையாளர்களாக, திருவள்ளூர் - அன்னியூர் சிவா, அப்துல் மாலிக், விழுப்புரம் - புதுச்சேரி சிவா, வீரமணி, கள்ளக்குறிச்சி - ஆர்.டி.அரசு, கே.பி. சங்கர், கடலுார் - கலாநிதி வீராசாமி, பரிதி இளம்சுருதி உட்பட 76 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.