📅 Monday, 24 August 2026 IST | ஆவணி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 24, 2026 09:04 AM

Udhayanidhi: ``தஞ்சாவூர் மாவட்டத்தில் பேசும்போது மிகவும் ஜாக்கிரதையாகப் பேச வேண்டும்"

Udhayanidhi: ``தஞ்சாவூர் மாவட்டத்தில் பேசும்போது மிகவும் ஜாக்கிரதையாகப் பேச வேண்டும்"

Udhayanidhi: ``தஞ்சாவூர் மாவட்டத்தில் பேசும்போது மிகவும் ஜாக்கிரதையாகப் பேச வேண்டும்" - உதயநிதி

தஞ்சையில் நடந்த திருமணத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூரில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.

அதைத் தொடர்ந்து நிகழ்வில் உரையாற்றினார். அப்போது, ``கடந்த மூன்று மாதங்களில் மட்டும் நான் நான்கு முறை தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்துள்ளேன். அப்படியும் அரசு என்னைக் கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்து வந்துவிட்டது.

தமிழ்நாட்டில் எங்கு பேசினாலும் பரவாயில்லை, தஞ்சாவூர் மாவட்டத்தில் பேசும்போது மிகவும் ஜாக்கிரதையாகப் பேச வேண்டும். நாம் பேசுகிறோமோ இல்லையோ, கீழே இருப்பவர்கள் பேசிக் கூட மாட்டிவிட்டு விடுவார்கள். ஆனால், இந்தக் கைது நடவடிக்கைகளுக்கெல்லாம் பயப்படும் ஆள் நான் கிடையாது.

விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த அந்தப் போராட்டத்தில் 22 நிமிடங்கள் உரையாற்றினேன். அதில், காவிரியில் தண்ணீர் வரவில்லை என்று சொன்னவுடன் கோபம் வந்துவிட்டது. இந்த டெல்டா மண்டலம் என்றுமே திராவிடக் கோட்டை என்பதை நாம் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளோம்.

டெல்டா மாவட்டங்களில் உள்ள சுமார் 30 தொகுதிகளில் வெறும் 4 தொகுதிகளில் மட்டும்தான் இன்றைய ஆளுங்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்தப் புதிய அரசு அமைந்து கடந்த 105 நாட்களில் இந்த அரசால் அதிகம் பாதிக்கப்பட்டது விவசாய மக்கள்தான்.

இதற்கு முன்பிருந்த நமது அரசு கடந்த 5 ஆண்டுகளில் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ஆம் தேதியன்றோ அல்லது அதற்கு முன்பாகவே தண்ணீரைத் திறந்து விட்டது. ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்து ஜூன், ஜூலை மாதங்கள் முடிந்து, ஆகஸ்ட் மாதமும் முடியப் போகும் நிலையிலும் இதுவரை மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.

காவிரியில் தண்ணீர் இல்லாததால் டெல்டா பகுதியில் குறுவை சாகுபடி மொத்தமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. சட்டமன்றத்தில் மீண்டும் பேசும்போது, விவசாயிகளுக்கு உடனடியாக வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதற்கு முதலமைச்சர், "ஏற்கனவே சிறப்புத் தொகுப்பு வழங்கிவிட்டோம்" என்று பதிலளித்தார்.

சிறப்புத் தொகுப்பிற்கும், வறட்சி நிவாரணத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லை முதலமைச்சருக்கு. விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கொடுக்க அரசிடம் நிதி இல்லை, விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியாது என்று சொன்ன முதலமைச்சர், ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் புதிய கார் வாங்கித் வாங்கித் தருவதாக அறிவித்துள்ளார்.

மகளிர் உரிமைத்தொகை, இலவச கேஸ் சிலிண்டர், வேலைவாய்ப்பற்றோருக்கு நிதியுதவி போன்ற எந்தத் தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றாத இந்த அரசு, எம்.எல்.ஏ-க்களுக்குக் கார் தருவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இன்றைக்கு சட்டமன்றத்தில் நடப்பதை அனைவரும் நேரலையில் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். மக்கள் பிரச்னை, விவசாயிகள் பிரச்னை, சட்டஒழுங்கு பிரச்னை என எதைப் பேசினாலும், கேட்கப்படும் கேள்விகளுக்கு எந்தப் பதிலையும் முதலமைச்சர் அளிப்பதில்லை. அமைச்சர்களும் கேட்கப்படும் கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் திசைதிருப்பும் வேலையையே செய்து வருகிறார்கள்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நமது தலைவர் ஆட்சியில் தமிழகம் இந்தியாவின் முன்னணி மாநிலமாக 11.19 சதவீத வளர்ச்சியோடு திகழ்ந்தது. ஆனால், இன்றைய அரசு ஒரு டம்மி அரசாங்கமாக இருந்து தமிழகத்தைப் பின்னோக்கித் தள்ளிக்கொண்டிருக்கிறது. இந்த அரசின் ஆணவத்திற்கும் கோமாளித்தனத்திற்கும் மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்." என்றார்.