உலகின் முன்னணி பவுலர் ஆனா உள்ளூர் மேட்ச்சில் வாரி வழங்கும் வள்ளல்.. அர்ஷ்தீப் சிங் மீது விமர்சனம்
உலகின் முன்னணி பவுலர் ஆனா உள்ளூர் மேட்ச்சில் வாரி வழங்கும் வள்ளல்.. அர்ஷ்தீப் சிங் மீது விமர்சனம்
டெல்லி: இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங், பஞ்சாபில் நடைபெற்ற உள்ளூர் டி20 லீக் போட்டியில் மிக மோசமாகப் பந்துவீசி ரன்களை வாரி வழங்கியுள்ளார். ஷேர்-இ-பஞ்சாப் டி20 கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், லூதியானா லயன்ஸ் கேப்டனான அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 51 ரன்கள் கொடுத்து அதிர்ச்சி அளித்துள்ளார்.
பாசில்கா ஃபால்கன்ஸ் மற்றும் லூதியானா லயன்ஸ் அணிகளுக்கு இடையேயான இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாசில்கா அணிக்கு அதன் கேப்டன் சுப்மன் கில் 21 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அதிரடி துவக்கம் அளித்தார். லூதியானா அணியின் சுழற்பந்து வீச்சாளர் கார்த்திக் சதா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். இதனால் பாசில்கா அணி 112 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
ஆனால், ஆட்டத்தின் கடைசி ஓவர்களில் அர்ஷ்தீப் சிங்கின் பந்துவீச்சை பாசில்கா அணி பேட்டர்கள் வெளுத்து வாங்கினர். குறிப்பாக 19-வது ஓவரை நோ-பாலுடன் தொடங்கிய அர்ஷ்தீப் சிங், அந்த ஓவரில் மட்டும் 18 ரன்களை வாரி வழங்கினார். இதன் மூலம் பாசில்கா அணி 20 ஓவர்களில் 170 ரன்கள் குவித்தது. சர்வதேச கிரிக்கெட்டில் முத்திரை பதித்து வரும் ஒரு முன்னணி இந்திய வீரர், உள்ளூர் தொடரில் இப்படி விக்கெட் ஏதுமின்றி 51 ரன்களை வாரி வழங்கியது ரசிகர்களிடையே பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் அவரது பந்துவீச்சை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தொடர்ந்து 171 ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய லூதியானா லயன்ஸ் அணிக்கு அர்ஷ்தீப் சிங் 8-வது வீரராக களம் இறங்கி 9 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட போது மாதவ் சிங் பதானியா சிறப்பாகப் போராடினார். கடைசி பந்தில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட போது அவரால் பவுண்டரி மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் லூதியானா லயன்ஸ் அணி வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.