ரிங்கு சிங் தான் அடுத்த கேகேஆர் கேப்டன்.. மீருட் அணி 10 போட்டியில் 9 வென்று சாம்பியன் பட்டம்
ரிங்கு சிங் தான் அடுத்த கேகேஆர் கேப்டன்.. மீருட் அணி 10 போட்டியில் 9 வென்று சாம்பியன் பட்டம்
மும்பை: உத்தரபிரதேச டி20 லீக் தொடரில் மீரட் மேவரிக்ஸ் அணியை சாம்பியன் பட்டத்திற்கு வழிநடத்தியதன் மூலம், இந்திய அணியின் நட்சத்திர இடதுகை பேட்ஸ்மேன் ரிங்கு சிங், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் பதவிக்கு போட்டி போட தயாராகி வருகிறார்.
லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், ரிங்கு சிங் தலைமையிலான மீரட் மேவரிக்ஸ் அணி, புவனேஷ்வர் குமார் தலைமையிலான லக்னோ ஃபால்கன்ஸ் அணியை 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
டெல்லியில் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்த ரிங்கு சிங், இந்த லீக் தொடரில் தனது நேர்த்தியான கேப்டன்சி மூலம் கவனம் ஈர்த்துள்ளார்.
இறுதிப் போட்டியில் பேட்டிங்கில் ரிங்கு சிங் 5-வது வீரராக களம் இறங்கி 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்த போதிலும், தொடக்க வீரர் திவ்யான்ஷ் ஜோஷி 40 பந்துகளில் 105 ரன்கள் குவித்ததன் மூலம் மீரட் மேவரிக்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. 204 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ ஃபால்கன்ஸ் அணி 16 ஓவர்களில் 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
இந்த 2026 ஆம் ஆண்டு UPT20 தொடரில், ரிங்கு சிங் தலைமையிலான மீரட் மேவரிக்ஸ் அணி விளையாடிய 10 போட்டிகளில் 9 போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இதன் மூலம், அவருடைய அபார கேப்டன்ஷி திறமை வெளியாகி இருக்கிறது.
ஐபிஎல் 2026 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணை கேப்டனாக ரிங்கு சிங் செயல்பட்டார். அந்த சீசனில் அஜிங்கியா ரஹானேவின் தலைமையின் கீழ் அவர் அனைத்து 14 போட்டிகளிலும் விளையாடினார். தற்போது ரஹானே அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டதால், கேகேஆர் அணி புதிய கேப்டனைத் தேடி வருகிறது. இந்த நிலையில், கேப்டன் பொறுப்பை ஏற்க ரிங்கு சிங் ஒரு சிறந்த தேர்வாக உருவெடுத்துள்ளார்.
ரிங்கு சிங் கடந்த 2018 ஆம் ஆண்டு அறிமுகமானது முதல் சுமார் 8 ஆண்டுகளாக கேகேஆர் அணியுடன் இணைந்து பயணித்து வருகிறார். இதுவரை விளையாடி உள்ள 73 ஐபிஎல் போட்டிகளில் அவர் 1394 ரன்கள் குவித்துள்ளார். மேலும், 2026 ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணியின் அதிக ரன் குவித்த வீரராகவும் திகழ்ந்தார்.
முன்னதாக, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் யாஷ் தயாள் வீசிய கடைசி ஓவரில் தொடர்ந்து ஐந்து சிக்ஸர்கள் விளாசி அணியை வெற்றி பெறச் செய்ததன் மூலம் ரிங்கு சிங் உலக அளவில் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.