📅 Monday, 08 June 2026 IST | வைகாசி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports June 08, 2026 12:00 AM

உன் போராட்டம் எங்களுக்கு மட்டும் தான் தெரியும்.. ஸ்ரேயாஸ் ஐயர் குறித்து தங்கை வெளியிட்ட உண்மை

உன் போராட்டம் எங்களுக்கு மட்டும் தான் தெரியும்.. ஸ்ரேயாஸ் ஐயர் குறித்து தங்கை வெளியிட்ட உண்மை

உன் போராட்டம் எங்களுக்கு மட்டும் தான் தெரியும்.. ஸ்ரேயாஸ் ஐயர் குறித்து தங்கை வெளியிட்ட உண்மை

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் டி20ஐ கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, அவரது சகோதரி ஷ்ரேஸ்தா தனது சமூக வலைதள பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவை பகிர்ந்துள்ளார். ஜூன் 6 அன்று, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20ஐ தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. இதில், ஷ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளையில், சூர்யகுமார் யாதவ் தலைமைப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அணியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் துணை கேப்டனாக இருந்து வரும் ஷ்ரேயாஸ் ஐயருக்கு, டி20 கிரிக்கெட்டில் இந்த கேப்டன் பதவி அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் புதிய அத்தியாயமாக அமைந்துள்ளது. 31 வயதான இவர், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியை சாம்பியன் பட்டத்திற்கு அழைத்துச் சென்றதுடன், பஞ்சாப் கிங்ஸ் (PBKS) மற்றும் டெல்லி கேபிடல்ஸ் (DC) அணிகளையும் இறுதிப் போட்டி வரை கொண்டு சென்று தனது தலைமைத்துவ திறமையை ஏற்கனவே அழுத்தமாக நிரூபித்துள்ளார்.

தனது சகோதரனின் இந்த மிகப்பெரிய சாதனையை கொண்டாடும் வகையில், 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் ஷ்ரேஸ்தா பகிர்ந்துள்ளார். அதில் அவர், "எங்கிருந்து தொடங்கி, என்ன சொல்வது என்று தெரியவில்லை. கிரிக்கெட்டை வெறும் விளையாட்டாக நேசித்த பையன், இன்று இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்திருக்கும் உனது பயணத்தைப் பற்றி என்ன சொல்வது?

உன்னால் இது முடிந்தது ஷ்ரேயாஸ். உன் மீது எனக்கு இருக்கும் பெருமையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. வாழ்க்கை உன்னை பலமுறை சோதித்தபோதும், நீ நம்பிக்கை இழக்காமல் இருந்த அந்த மன உறுதிதான், எனக்கு ஒவ்வொரு நாளும் ஊக்கமளிக்கிறது," என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் அப்பட்டமான உண்மைகளை வெளிப்படுத்தும் விதமாக, "இந்த வெற்றியை அனைவரும் பார்க்கிறார்கள், ஆனால் இதற்காக நீ கொடுத்த தியாகங்கள், கடந்து வந்த தடைகள் மற்றும் உனக்குள்ளேயே நீ போராடிய போராட்டங்கள் பற்றி மிகச்சிலருக்கே தெரியும்.

அதைப்பற்றி யாருக்கும் தெரியாது, ஏனென்றால் உனது வலியை நீ ஒருபோதும் எங்களிடம் காட்டியதில்லை. உனது நேர்மறை எண்ணங்களையும், விடாமுயற்சியையும் கண்டு நான் எப்போதும் வியந்துள்ளேன்," என்று அந்த உணர்ச்சிகரமான பதிவில் ஷ்ரேஸ்தா நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.அயர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி, பெல்ஃபாஸ்டில் ஜூன் 26 அன்று தொடங்குகிறது.

2017-ம் ஆண்டு நவம்பரில் நியூசிலாந்துக்கு எதிராக அறிமுகமான ஷ்ரேயாஸ், இதுவரை 51 டி20ஐ போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வடிவிலான போட்டிகளில் விளையாடாத அவர், கடைசியாக 2023 டிசம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்கினார். மொத்தமாக 47 இன்னிங்ஸில் 1,104 ரன்களைக் குவித்துள்ள இவர், 30.66 சராசரியுடன் 136.12 ஸ்ட்ரைக் ரேட்டைக் கொண்டுள்ளார். இதில் 8 அரைசதங்கள் அடங்கும், அதிகபட்சமாக இலங்கைக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் எடுத்துள்ளார்.