வைபவ் சூர்யவன்ஷி கிரிக்கெட் எதிர்காலம் எப்படி இருக்கும்? பிரபல ஜோதிடர் கணிப்பு
வைபவ் சூர்யவன்ஷி கிரிக்கெட் எதிர்காலம் எப்படி இருக்கும்? பிரபல ஜோதிடர் கணிப்பு
மும்பை: இந்திய இளம் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி, ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடிப்பார் என்று பிரபல ஜோதிடர் சுமீத் பஜாஜ், கணித்துள்ளார். 2014-ல் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இலங்கைக்கு எதிராக 264 ரன்கள் குவித்து ரோஹித் சர்மா படைத்த உலக சாதனையை சூர்யவன்ஷி தகர்ப்பார் என்பதே பஜாஜின் தீர்க்கதரிசனம். முன்னதாக விராட் கோலியின் 50-வது ஒருநாள் சதம் குறித்து இவர் கூறிய கணிப்பு உண்மையானது குறிப்பிடத்தக்கது.
15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் 2026 தொடரில் தனது அபாரமான பேட்டிங் திறமையால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய அவர், 16 இன்னிங்ஸ்களில் 237.31 என்ற அதிரடி ஸ்டிரைக் ரேட்டுடன் மொத்தம் 776 ரன்களைக் குவித்து அந்தத் தொடரின் அதிக ரன்கள் எடுத்த வீரராக உருவெடுத்தார். இவர் சர்வதேச கிரிக்கெட்டிலும் தொடர்ந்து பல சாதனைகளை முறியடிப்பார் என பஜாஜ் நம்பிக்கையுடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையில், 2027 உலகக்கோப்பைக்கு முன்பாக ரோஹித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவார் என்றும் பஜாஜ் கணித்துள்ளார். ரோஹித் ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் வடிவங்களிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பே அவர் தனது ஓய்வு முடிவை அறிவிக்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பஜாஜ் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐபிஎல் 2026-ல் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டத்திற்காக, வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்திய அணியில் முதன்முறையாக இடம் கிடைத்துள்ளது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்கள் மற்றும் 2026 ஆசிய விளையாட்டுகளுக்கான இந்திய அணியில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான ஒருநாள் அணியில் அவர் இடம் பெறுவாரா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்று. இக்கட்டான சூழலிலும் அவர் காட்டிய முதிர்ச்சியான ஆட்டம் தேர்வுக்குழுவை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
இது குறித்து பேசிய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், "அவர் தனது ஆட்டத்திறமையால் எங்களை அவரைத் தேர்வு செய்யும்படி கட்டாயப்படுத்திவிட்டார். ஒரு இளம் வீரராக, இத்தகைய அழுத்தம் நிறைந்த சூழலில் விளையாடுவது எளிதானது அல்ல. அவரது திறமை குறித்து விவரிக்க வேண்டியதில்லை, ஒரு ஆட்டத்தையே மாற்றக்கூடிய வீரராக அவர் திகழ்கிறார். ஐபிஎல் தொடரில் அவர் வெளிப்படுத்திய ஆட்டத்தை வைத்து பார்க்கும்போது, அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய டி20 அணி அடுத்ததாக அயர்லாந்துடன் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. பெல்ஃபாஸ்டில் உள்ள சிவில் சர்வீஸ் கிரிக்கெட் கிளப்பில் ஜூன் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன. சூர்யவன்ஷியின் மட்டையாடும் திறமையைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.