விஜய்யை சந்தித்த சிவகார்த்திகேயன்.. பிணைப்பு தொடர்கிறது.. எல்லா போரும் முடிவுக்கு வந்தது!
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராகியிருக்கிறார் விஜய். அவர் சி.எம்மாக பரபரக்கும் சமயத்திலும்; தன்னுடைய திரைத்துறையிலிருந்து வருபவர்களை தவறாமல் சந்தித்துவருகிறார். அந்தவகையில் அடுத்த தளபதி என ஒருதரப்பால் கொண்டாடப்படும் சிவகார்த்திகேயன் இன்று முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்தார்.
நடிகர் விஜய் இப்போது நம் மாநிலத்தின் முதலமைச்சர். முதல்வன் திரைப்படத்தில் வருவது போல் சில வருடங்களிலேயே தமிழ்நாட்டின் அரசியல் முகத்தையே மாற்றி வைத்திருக்கிறார். அவரது ஆட்சியில் விமர்சனங்களும் இருக்கின்றன, பாராட்டும் சில விஷயங்களும் இருக்கின்றன. இருப்பினும், அவர் இந்தத் தேர்தலில் செய்த மேஜிக்கை அனைவரும் ஆமோதித்து கை தட்டத்தான் வேண்டும் என்பது பலரது எண்ணமாக இருக்கிறது.
திரைத்துறையுடன் சந்திப்பு: முதலமைச்சராகி முன்னரைவிட வேகமாக ஓட வேண்டிய கட்டாயம் இருந்தாலும்; திரைத்துறையிலிருந்து தன்னை சந்திக்க வருபவர்களுக்கு தவறாமல் நேரம் ஒதுக்குகிறார். அந்தவகையில் கடந்த வாரத்தில் பல நட்சத்திரங்களுடன் சந்திப்பு நிகழ்ந்தது. தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சென்று முதலமைச்சர் விஜய்யை சந்தித்திருக்கிறார்.
சிவாவின் பதிவு: இந்த சந்திப்பு குறித்து அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "மக்களின் மனங்களை மகிழ்வித்த கலைஞராக இருந்து, இன்று ஒரு மாநிலத்தை வழிநடத்தும் தலைவராக உயர்ந்திருக்கிறீர்கள். சில பயணங்கள் உண்மையிலேயே அசாதாரணமானவை. தமிழ்நநாடு மாண்புமிகு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தது எனக்கு பெருமையனா தருணம்.
என்றும் தொடரும்: 'ரசிகன் எக்ஸ்பிரஸ்' நிகழ்ச்சியிலிருந்து, 'விஜய் அவார்ட்ஸ்' மேடை வரை, 'GOAT' திரைப்படத்தில் உங்களுடன் திரையை பகிர்ந்ததுவரை இப்போது உங்களை இந்தப் பொறுப்பில் சந்தித்த இத்தருணம் என் வாழ்க்கையில் எப்போதும் சிறப்பான நினைவாக இருக்கும். நமது சகோதரத்துவமும், நமது பிணைப்பும் என்றும் தொடரும்" என தெரிவித்திருக்கிறார்.
முடிவுக்கு வந்த போர்: முன்னதாக,திரைத்துறையில் விஜய் Vs சிவகார்த்திகேயன் என்ற பேச்சு சிலரால் கடந்த காலங்களில் கட்டமைக்கப்பட்டது. முக்கியமாக ஜனநாயகன் திரைப்பட சமயத்தில் வேண்டுமென்றே பராசக்தியை போட்டிக்கு கொண்டு வந்தார் எஸ்கே; அதற்கு பின்னணியில் திமுகவின் உதயநிதி இருக்கிறார்; மறைமுகமாக ஒரு போரே நடந்துவருகிறது எனவும் குரல்கள் பலமாகவே கேட்டன. அதுமட்டுமின்றி சிவாதான் இன்னொரு விஜய் எனவும் சிலர் பேச நிலைமை விபரீதமானது.
A post shared by Sivakarthikeyan Doss (@sivakarthikeyan)
அதனையடுத்து, விஜய் ரசிகர்கள் தங்கள் வழக்கமான ட்ரோல் ஆயுதத்தை எடுக்க; சிவா கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகத்தான் செய்தார். இப்போது இந்த சந்திப்பு நிகழ்ந்திருப்பதன் மூலமாக அந்த போரெல்லாம் முடிவுக்கு வந்துவிட்டது என்றும்; சிவாவின் போஸ்ட்டில் இருக்கும் விஷயமும் உணர்வுப்பூர்வமாக இருக்கிறது என்றும் கமெண்ட்ஸ்களை பார்க்க முடிகிறது.