விராட் கோலி, அனுஷ்கா சர்மா ஆசிரமத்திற்கு சென்றால், உங்களுக்கு என்ன வந்தது? முகமது ஷமி ஆதரவு
விராட் கோலி, அனுஷ்கா சர்மா ஆசிரமத்திற்கு சென்றால், உங்களுக்கு என்ன வந்தது? முகமது ஷமி ஆதரவு
மும்பை: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதியரின் ஆன்மீகப் பயணங்களை விமர்சிப்பவர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார். அவர்கள் தங்களின் நம்பிக்கையைப் பின்பற்றுவதை யாரும் ஆட்சேபிக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், அனுஷ்கா தான் கோலியை ஆன்மீகப் பாதைக்கு அழைத்துச் சென்றார் என்ற விமர்சனங்களுக்கும் பதில் அளித்துள்ள ஷமி, ஒருவேளை அது உண்மையாக இருந்தாலும், அதில் மற்றவர்கள் தலையிட எந்த உரிமையும் இல்லை என்று கூறியுள்ளார். கோலியும் அனுஷ்காவும் அடிக்கடி விருந்தாவனத்தில் உள்ள ஆன்மீக குரு பிரேமானந்த் மகாராஜைச் சந்தித்து ஆசி பெறுவது வழக்கம்.
அண்மையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் முடிந்த பிறகும் அவர்கள் அங்கு சென்றிருந்தனர். இந்த நட்சத்திரத் தம்பதியினர் தங்கள் குழந்தைகளான வாமிகா மற்றும் அகாய் ஆகியோரையும் ஆன்மீக குருவிடமும், இந்தியாவின் பல்வேறு கோயில்களுக்கும் அழைத்துச் சென்று ஆசி பெற்று வருகின்றனர்.
நேர்காணலில் ஷமி இது குறித்துப் பேசுகையில், இது ஒன்றும் திடீரென நடந்த விஷயம் அல்ல என்றும், கோலி எப்போதும் தனது நம்பிக்கைகளில் மிகுந்த ஈடுபாடும் தீவிரமும் கொண்டவர் என்றும் குறிப்பிட்டார்."இது ஒரு நல்ல விஷயம். இது திடீரென்று நடந்தது அல்ல, அவர் தனது நம்பிக்கைகளில் மிகவும் அர்ப்பணிப்புடன் இருப்பவர். அதற்காகத் தனியாக நேரம் ஒதுக்கி, எல்லாவற்றையும் ஒரு முறையான வழியில் பின்பற்றுபவர்" என்று ஷமி கூறினார்.
மேலும், கோலி தனது ஹோட்டல் அறைகளைக் கூட எவ்வளவு ஒழுங்காக வைத்திருக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டி, அவர் எவ்வளவு நேர்த்தியானவர் என்பதை விளக்கினார்."மகாராஜைச் சந்திப்பது குறித்து யாரும் விரல் நீட்டவோ அல்லது ஆட்சேபனை தெரிவிக்கவோ தேவையில்லை என்று நான் நினைக்கிறேன். நீங்கள் ஒன்றில் நம்பிக்கை வைத்தால், அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவர்கள் ஒரு தம்பதியாக இதைச் செய்வதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சனை இருக்க முடியும்? எனக்குப் புரியவில்லை" என்றும் ஷமி கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2021-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு, முகமது ஷமி அவரது மதம் சார்ந்த கடுமையான சமூக ஊடக விமர்சனங்களுக்கு உள்ளானபோது, விராட் கோலி அவருக்கு ஆதரவாக நின்று கேடயமாகச் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஷமி, கோலியின் தனிப்பட்ட உரிமைக்காகக் குரல் கொடுத்துள்ளார்.