விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது: மானியக் கோரிக்கை விவாதம் இன்று தொடக்கம்
சென்னை: தமிழக சட்டப்பேரவை 4 நாள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் கூடுகிறது. இதில் துறைவாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்க உள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆக.5-ம் தேதி மாநிலத்தின் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். அதில் நகராட்சி நிர்வாகத் துறைக்கு ரூ.29,863 கோடி, நீர்வளத் துறைக்கு ரூ.9,264 கோடி, வேளாண் மற்றும் உழவர் நலத் துறைக்கு ரூ.14,984 கோடி என பல்வேறு துறைகளுக்கு நிதிகள் ஒதுக்கப்பட்டன.
கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2 ஆயிரம் கோடியில் 'வெற்றி மடிக்கணினி திட்டம்', தலா ரூ.5 லட்சம் அலகுத்தொகையாக வழங்கும் ‘வெற்றி வீடு திட்டம்’ உள்ளிட்ட திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.
ஆக.6-ம் தேதி வேளாண் பட்ஜெட்டை, வேளாண் துறை அமைச்சர் ஆர்.வினோத் தாக்கல் செய்தார்.
அதில், தமிழகத்தில் சிறந்த விவசாயிகளுக்கு நம்மாழ்வார், அஞ்சலையம்மாள் பெயரில் விருதுகள் வழங்குவது, ரூ.785 கோடியில் நீர் மேலாண்மைக்கான துளித் துளித் தண்ணீர் திட்டம், மகளிருக்கு ட்ரோன்கள் மானியத்தில் வழங்கும் 'வெற்றி வான்மகள் திட்டம்', 'வெற்றி இல்லத்தரசி வீட்டுத்தோட்டம் திட்டம்' உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, கடந்த 7, 10, 11 ஆகிய தேதிகளில் 3 நாட்களுக்கு இரு பட்ஜெட்கள் மீதான பொதுவிவாதம் நடைபெற்றது.
அதில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "பட்ஜெட்டில் எந்தவொரு புதிய திட்டமும் இல்லை. முந்தைய திமுக அரசின் திட்டங்கள்தான் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன" என்றார்.
முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசும்போது, "மகளிர் உரிமைத் தொகை உயர்வு, இலவச சிலிண்டர்கள், முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி போன்ற முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை" என குற்றஞ்சாட்டி இருந்தார்.
இந்த விவாதத்தில் எம்எல்ஏக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கடந்த 12-ம் தேதி, இரு அமைச்சர்களின் பதிலுரையுடன் விவாதம் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து 4 நாள் விடுமுறைக்குப் பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது.
இதில் துறைவாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்குகிறது. முதல் நாளான இன்று சுகாதாரம் மற்றும் வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை மீது விவாதமும், அறிவிப்பு வெளியிடலும் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடர், முதல்வர் பதிலுரையுடன் வரும் செப்.8-ம் தேதி நிறைவடைகிறது.