வரும் 9ல் த.வெ.க., கூட்டணி கூட்டம்: காங்கிரஸ்
சென்னை: தமிழக வெற்றிக் கழக கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம், வரும் 9ல், சென்னை - பனையூரில் நடக்கிறது. அதற்காக, காங்கிரஸ், வி.சி.க.,வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
த.வெ.க., அரசுக்கு ஆதரவு தரும் கட்சி தலைவர்கள் கூட்டம், முதல்வர் விஜய் தலைமையில், கடந்த ஜூலை 1ம் தேதி நடந்தது. அதில், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் பங்கேற்கவில்லை.
இந்த சூழலில், த.வெ.க., கூட்டணி கட்சிகளின், இரண்டாவது ஆலோசனைக் கூட்டம், வரும் 9ம் தேதி மாலை 4:00 மணிக்கு, சென்னை பனையூரில் உள்ள த.வெ.க., தலைமை அலுவலகத்தில் நடக்க உள்ளது.
இதற்காக, அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோர், நேற்றுமுன்தினம், சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களுக்கு, நேரில் சென்று அழைப்பு விடுத்தனர்.
மேலும், சென்னை ராயப்பேட்டை சத்தியமூர்த்தி பவனில் காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூரை, அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர், நேற்று நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
அப்போது, ராஜ்யசபா காங்., - எம்.பி., பிரவீன் சக்கரவர்த்தி, தமிழக அமைச்சர் ராஜேஷ் குமார் ஆகியோர் இருந்தனர்.
தொடர்ந்து, சென்னை அசோக் நகரில் உள்ள, வி.சி.க., தலைமை அலுவலகத்தில், அக்கட்சி தலைவர் திருமாவளவனை, அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
இதுகுறித்து, காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர் அளித்த பேட்டியில், ''வரும் 9ல் நடக்கும் த.வெ.க., கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில், காங்., பங்கேற்கும்.
''இந்த கூட்டத்தில், கூட்டணி பெயர் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும். வரும் 2029ல், ராகுலே பிரதமர் வேட்பாளர்; முதல்வர் விஜயும், அமைச்சர்களும் இதில் தெளிவாக உள்ளனர்,'' என்றார்.
வி.சி.க., தலைவர் திருமாவளவன் கூறுகையில், ''வரும் 9ல் நடக்கும் கூட்டத்தில், த.வெ.க., தலைமையில் கூட்டணி அமைப்பது தொடர்பாக, ஒரு முடிவு எடுக்கப்படும்,'' என்றார்.