ரூ.1 கோடி கொள்ளையடித்த கும்பல் சிக்கியது
கோவை: கோவையில், 1 கோடி ரூபாய் பணம், நகைகளை கொள்ளையடித்து தப்பிய கும்பலை, உளுந்துார்பேட்டை போலீசார், சினிமா பாணியில் மடக்கி பிடித்தனர்.
கோவையில் பணம், நகைகளை கொள்ளையடித்து, காரில் மர்ம நபர்கள் தப்பி செல்வதாக, பல்வேறு மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், நெடுஞ்சாலை பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில் இருந்து கொள்ளை கும்பல் காரில் தப்பியது. இதையறிந்த போலீசார், காரை பின் தொடர்ந்து சென்றனர். தியாகதுருகம், எலவனாசூர்கோட்டை, உளுந்துார்பேட்டை போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
உளுந்துார் பே ட்டை டி.எஸ்.பி., அசோகன் தலைமையிலான போலீசார், எம்.எஸ்., தக்கா அருகே தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலை குறுக்கே பேரிகார்டுகளை வைத்து தடுப்பு ஏற்படுத்தி, வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
மாலை, 4:00 மணிஅளவில் கொள்ளை கும்பல் வந்த காரை, சினிமா பாணியில் மடக்கி பிடித்தனர். விசாரணையில், கோவை தொழிலதிபர் ஒருவரிடமிருந்து, 1 கோடி ரூபாய் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து, அந்த கும்பல் தப்பியது தெரியவந்தது. கொள்ளை கும்பல் பின்னணி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.