📅 Wednesday, 12 August 2026 IST | ஆடி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 12, 2026 06:04 AM

 56 லட்சம் 'ஸ்மார்ட்' மீட்டர் பொருத்த தமிழக மின் வாரியம் நடவடிக்கை

 56 லட்சம் 'ஸ்மார்ட்' மீட்டர் பொருத்த தமிழக மின் வாரியம் நடவடிக்கை

சென்னை : சென்னை உட்பட மாநிலம் முழுதும், 56 லட்சம் 'ஸ்மார்ட்' மீட்டர் பொருத்த, மின் வாரியம் 'டெண்டர்' கோர உள்ளது.

தமிழகத்தில் வீடுகளை உள்ளடக்கிய மின் இணைப்புகளில், மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அந்த மீட்டரில் பதிவாகியுள்ள மின் பயன்பாட்டை, மின் வாரிய பணியாளர்கள் நேரில் சென்று கணக்கு எடுக்கின்றனர். சிலர், நேரில் செல்லாமல் கணக்கெடுப்பதால், நுகர்வோருக்கு அதிக மின் கட்டணம் வருகிறது.

எனவே, ஆளில்லாமல் கணக்கெடுக்க, 'ஸ்மார்ட்' மீட்டர் திட்டத்தை செயல்படுத்த மின் வாரியம் முடிவு செய்தது. இந்த மீட்டரில் தொலைதொடர்பு வசதி ஏற்படுத்தப்பட்டு, அலுவலக 'சர்வர்' உடன் இணைக்கப்படும். மின் பயன்பாடு கணக் கெடுக்க வேண்டிய தேதி வந்ததும், தானாகவே கணக்கெடுத்து, நுகர்வோரின் மொபைல் போன் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும்.

மாநிலம் முழுதும், 3.04 கோடி மின் இணைப்புகளில், 'ஸ்மார்ட் 'மீட்டர் பொருத்தி, பராமரிக்கும் பணிக்கு, 2025 மார்ச்சில் 'டெண்டர்' கோரப்பட்டது. திட்ட செலவு, 20,000 கோடி ரூபாய்.

இந்த டெண்டரில், 50 நிறுவனங்கள் பங்கேற்றன. அவை வழங்கிய தொ ழில்நுட்ப புள்ளி திறக்கப்பட்ட நிலையில், அரசின் அனுமதி கிடைக்காததால், விலைப் புள்ளி திறக்கப்படாமல் இருந்தது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், 'ஸ்மார்ட்' மீட்டர் டெண்டரில், எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், 'சென்னையில் அனைத்து நுகர்வோருக்கும், மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள 50 லட்சம் தொழில் மற்றும் வணிக நுகர்வோருக்கும், 'ஸ்மார்ட்' மீட்டர் பொருத்தப்படும்' என, தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.

இந்த பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. எனவே, கடந்த தி.மு.க., ஆட்சியில், 3 கோடி மின் இணைப்புகளில், ஸ்மார்ட் மீட்டர் பொருத்த கோரிய 'டெண்டர்' ரத்து செய்யப்பட உள்ளது.

இது குறித்து, விரைவில் நடக்க உள்ள மின் வாரிய இயக்குநர்கள் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது. ஒட்டு மொத்தமாக, 56 லட்சம் 'ஸ்மார்ட்' மீட்டர் பொருத்த, மின் வாரியம் புதிதாக 'டெண்டர்' கோர ஆயத்தமாகி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுதும் உள்ள அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகளில், 1.25 லட்சம் 'ஸ்மார்ட்' மீட்டர்களை, மத்திய அரசின் மறுசீரமைக்கப்பட்ட மின் வினியோக திட்டத்தின் கீழ், மின் வாரியம் பொருத்த உள்ளது.