‘ஐபிஎல் மேட்சில் பவுடர் நுணுக்கியதை உலகமே பார்த்தது’ சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர்கள் காரசார விவாதம்
‘ஐபிஎல் மேட்சில் பவுடர் நுணுக்கியதை உலகமே பார்த்தது’ சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர்கள் காரசார விவாதம்
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று அமைச்சர் நிர்மல் குமார் பேசுகையில், ‘‘கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தில் போதை பொருள் பழக்கம் அதிமாக இருந்தது. இன்டர்நேஷனல் போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் என்ற நபர் டெல்லியில் கைது செய்யப்பட்டார். அந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் எல்லா வகையிலும் போதைப் புழக்கம் இருந்தது. அதை தடுக்க தற்போது முதல்வர் அனைத்து வகையிலான சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்து வருகிறார். போதை பொருளை அனைத்து வகையிலும் கட்டுப்படுத்த வேண்டும் என்பது தான் முதல்வரின் கொள்கை. அனைத்து நடவடிக்கைகளையும் முதல்வர் எடுப்பார்’’ என்றார். அமைச்சரின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, இதற்கு பதிலளித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “அமைச்சர் சம்பந்தப்பட்ட ஒரு நபரின் பெயரை, இங்கு குறிப்பிட்டு பேசியிருக்கிறார். அந்த சம்பந்தப்பட்ட நபரின் மீது அப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்தவுடன், எங்கள் தலைவர் அவரை கைது செய்து, உடனடியாக அவரை கட்சியில் இருந்து நீக்கிவிட்டோம். ஆனால், இவர்கள் ஆட்சி என்ன லட்சணத்தில் நடந்துகொண்டு இருக்கிறது என்பதை மக்கள் இன்று பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களின் அமைச்சரே ஐபிஎல் மேட்சில் பவுடர் நுணுக்கிக்கொண்டு, மாத்திரை நுணுக்கினேன் என்று கதை விட்டார். அவரிடம் உங்கள் காவல்துறை ஏதாவது விசாரணை நடத்தியதா? அவர் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கிறீர்களா? அதுமட்டுமல்ல, சமீப காலமாக ஆளுங்கட்சியைச் சேர்ந்த பலர் போதைப்பொருள் வழக்கில் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
அமைச்சர் பேசியதற்கு, ஏதாவது ஆதாரம் கேட்டு இருக்கிறீர்களா? நாங்கள் உடனடியாக அவரை கைது செய்துள்ளோம், அவரை கட்சியில் இருந்து நீக்கி இருக்கிறோம். உங்கள் அமைச்சர் ஐ.பி.எல் மேட்சில் பவுடர் நுணுக்கிக்கொண்டு இருந்ததை, இந்த உலகமே பார்த்தது. பல்வேறு விமர்சனங்கள் வந்தன. குழந்தைக்கு மாத்திரை கொடுத்தேன் என்று கதை விட்டார். அதற்காக ஏதாவது விசாரணை நடத்தி இருக்கிறீர்களா, புகார் அல்லது நடவடிக்கை எடுத்திருக்கிறீர்களா?’’ என்றார்.
அமைச்சர் நிர்மல் குமார்: ஜாபர் சாதிக்குடன் தொடர்புடையவர்களை சபை நாகரிகம் கருதி நான் இந்த பேரவையில் சொல்லவில்லை. அந்த வழக்கில் டெல்லியில் பதியப்பட்ட வழக்கு மட்டும் தானே தவிர, இங்கே எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. அவரை காப்பாற்ற தான் முயற்சி நடந்தது.
அமைச்சர் சரத்குமார்: ஸ்டேடியத்தில் நடைபெற்ற விவகாரம் குறித்து நான் ஏற்கனவே விளக்கத்தை அளித்து விட்டேன். அவர்களுக்கு பல்வேறு கருத்துகள், முரண்பாடுகள் இருக்கலாம். அவர்கள் சொல்லிகிறார்கள் என்றால், அந்த சமயத்தில் திமுக ஆட்சி தான் நடைபெற்றது. அப்பொழுது அந்த ஸ்டேடியம் வாசலில் போதை பொருளை விற்றார்கள் என்று ஒத்துக் கொள்கிறார்களா? அதனால் ஆதாரம் இல்லாமல் விளக்கம் கொடுத்த பின்னரும் தேவையில்லாமல் பேசக்கூடாது.
கே.என்.நேரு: அமைச்சர் பற்றி குற்றச்சாட்டு சொன்னால், அவர் பதில் சொல்லி விட்டார். அதை விடுத்து வேறு விசயத்தை சொல்லக்கூடாது. கார்டில் தடவினீங்களே அது என்ன என்று சொல்லுங்கள். இவ்வாறு விவாதம் நடந்தது.