அப்பர் தாம்சனில் அனுமதியின்றி வீட்டுக்குள் நுழைந்ததாக நம்பப்படுபவர்
அப்பர் தாம்சனில் தனியார் குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் அனுமதியின்றி நுழைந்ததாகச் சந்தேகிக்கப்படுபவரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
அச்சம்பவம் சனிக்கிழமை (பிப்ரவரி 21) நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. மேரிகோல்ட் டிரைவில் உள்ள குடியிருப்புப் பகுதியில், தங்களின் உதவி தேவைப்படுவதாக சனிக்கிழமை இரவு 9.40 மணியளவில் அழைப்பு வந்ததெனக் காவல்துறை, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 22) பதிலளித்தது.
ஒருவர் அனுமதியின்றி வீட்டுக்குள் நுழைந்திருக்கக்கூடும் என்றும் தாங்கள் சம்பவ இடத்தைச் சென்றடைவதற்குள் அவர் அங்கிருந்து கிளம்பியிருப்பார் என்பதையும் காவல்துறை அதிகாரிகள் தெரிந்துகொண்டனர்.
சந்தேக நபரை அடையாளம் கண்டு தேடும் பணிகள் தொடர்வதாகக் காவல்துறை குறிப்பிட்டது. விசாரணை தொடர்வதாகவும் அது தெரிவித்தது.
சம்பவம் குறித்துத் தகவல் தெரிந்தோர் 1800-255-0000 என்ற எண்ணுக்கு அழைத்தோ www.police.gov.sg/i-witness என்ற இணைய முகவரி வாயிலாகவோ தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.