📅 Friday, 04 September 2026 IST | ஆவணி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 04, 2026 07:02 PM

செந்தில் பாலாஜிக்கு ஸ்பெஷல் டீல்... ஸ்டாலின் கொடுத்த ஆஃபர் என்ன?

செந்தில் பாலாஜிக்கு ஸ்பெஷல் டீல்... ஸ்டாலின் கொடுத்த ஆஃபர் என்ன?

செந்தில் பாலாஜிக்கு ஸ்பெஷல் டீல்... ஸ்டாலின் கொடுத்த ஆஃபர் என்ன?

திமுகவில் மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜிக்கு மட்டும் ஒரு ஆஃபர் தலைமை கொடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், முதற்கட்டமாக சீனியர்களை ஓரம்கட்டிவிட்டு, இளம் இரத்தங்களுக்கு பொறுப்புகளை வழங்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடியான முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, 78 ஆக இருந்த திமுகவின் மாவட்டங்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல், 70 வயதைக் கடந்த 13 முன்னாள் அமைச்சர்களும், மூன்று முறை மாவட்டச் செயலாளராக இருந்த 4 பேரும் தங்களது கட்சிப் பதவிகளை இழக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சீனியர்கள் சிலர் ஸ்டாலினை நேரில் சந்தித்து முறையிட்டபோதிலும், “கட்சிக்காக இதனை நீங்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்” என அவர் கறாராக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் சீனியர்கள் கடும் அப்செட்டில் இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மட்டும் ஸ்டாலின் தரப்பில் ஒரு சிறப்பு ஆஃபர் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் மாவட்டச் செயலாளராக இருந்த செந்தில் பாலாஜி, தற்போது கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாகவும் உள்ளார். இதனிடையே, கரூர் மாவட்டம் கிழக்கு மற்றும் மேற்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இதனால், செந்தில் பாலாஜியிடம் கரூர் அல்லது கோவை ஆகிய இரு மாவட்டங்களில், எந்த மாவட்டப் பொறுப்பை விரும்புகிறீர்கள் என்பதை நீங்களே தேர்வு செய்து சொல்லுங்கள் என ஸ்டாலின் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம், செந்தில் பாலாஜிக்கும் திமுக தலைமைக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்பட்டு வந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.