தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: `முதல்நாளே வந்திருப்போம்; ஆனா.!'
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: `முதல்நாளே வந்திருப்போம்; ஆனா.!' - அமைச்சர்கள் சொன்ன விளக்கம்!
தூய்மைப் பணியாளர்கள் போராட்டக் களத்துக்கு அமைச்சர்கள் சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
தூய்மைப் பணியார்களுக்கு பணி நிரந்தரம், குறைந்தபட்ச ஊதியம், வாரவிடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உழைப்போர் உரிமை இயக்க மாநிலத் தலைவர் கு.பாரதி தலைமையில் தூயமைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனார். போராட்டத்தின் 15-வது நாளான இன்று, போராட்ட களத்துக்கு வந்த அமைச்சர்கள் ஆனந்த், ராஜ்குமார், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா போராட்டக்காரர்களிடம் உரையாற்றினர்.
அமைச்சர் ஆனந்த்:
``முதல்வர் உங்களை சந்தித்து உங்கள் குரலை, கோரிக்கையைக் கேட்க அனுப்பியிருக்கிறார். முதல்வர் உங்களுக்கு எல்லாம் செய்வார் என்ற நம்பிக்கையை உங்கள் முகத்தில் பார்க்கிறேன். முந்தைய ஆட்சியில் நீங்கள் போராட்டம் செய்தால் அதை கண்டுகொள்ளமாட்டார்கள். கைது செய்வார்கள். ஆனால், தளபதி காதுகளுக்கு இந்தத் தகவல் போனதும், எங்களை அனுப்பியிருக்கிறார். உங்கள் கோரிக்கை நியாயமானது. அதை நிறைவேற்ற விரும்பினாலும், முந்தைய அரசு கஜானாவை காலி செய்துவிட்டுச் சென்றுவிட்டது. உங்கள் மகிழ்ச்சிக்காக முதல்வர் உங்களுடன் இருப்பார். விரைவில் இந்தப் பிரச்னைக்கு முடிவு கொண்டுவருவோம்."
அமைச்சர் நிர்மல் குமார்:
``உங்களுக்குச் செய்யாமல் வேறு யாருக்கு செய்யப் போகிறோம். உங்கள் அண்ணன் தான் ஆட்சியில் இருக்கிறார். உங்கள் அரசு உங்களுக்கு எல்லாம் செய்யும். இப்போது என்ன செய்ய முடியுமோ அதை நிச்சயம் செய்வோம். உங்களை வருத்திக்கொள்ள வேண்டாம். கவலைப்படாதீர்கள். எல்லாம் சரியாகும்."
அமைச்சர் ராஜ்மோகன்:
``அமைச்சராக நாங்கள் வரவில்லை. உங்கள் வீட்டு பிள்ளையாக வந்து நிற்கிறோம். உங்களுக்காக போராடும் பாரதி, மோகன் அவர்களுக்கு பாராட்டு. கஜானா காலியாகிவிட்டது என்பதை ஏற்கெனவே தெரிவித்திருந்தோம்.
இனி வெறும் பேச்சு இல்லை. செயலில் இருப்போம். அதை நீங்கள் பார்ப்பீர்கள். உங்களுக்கு வேலை செய்ய வந்திருக்கிறோம். போராடுவது உங்கள் உரிமை, அதை நிறைவேற்றுவது எங்கள் கடமை. "
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா:
``முதல்வர் வந்தபிறகு சொன்ன வாக்குறுதிகளில் என்னவெல்ல செய்ய முடியுமோ அதை செய்துகொண்டே இருக்கிறோம். இங்கு 4 அமைச்சர்கள் வரவில்லை. முதல்வரின் மனமும் இங்குதான் இருக்கிறது. இங்கு முதல்நாளே வந்திருக்கலாமே என நீங்கள் கேட்கலாம். எதிர்க்கட்சியாக இருக்கும்போது அரசை வலியுறுத்த முதல்நாளே வந்திருப்போம். ஆனால், ஆளும் கட்சியானபிறகு, இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு என்பதைக் கண்டுபிடித்துதான் வரவேண்டும். அதற்குதான் இவ்வளவு தாமதம்.
முதல்நாளே போராட்டத்துக்கு வந்திருப்போம். ஏனென்றால் எங்களுக்கு இன்னும் அமைச்சரான உணர்வே இல்லை. இந்த அரசு வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என முதல்வர் விரும்புகிறார். இதை இப்போது செய்ய முடியும். இதை இப்போது செய்வதில் நிர்வாகச் சிக்கல் இருக்கிறது என மக்களிடம் வெளிப்படையாகப் பேசச் சொல்லியிருக்கிறார். உங்கள் போராட்டத்தால் எங்களுக்கு தூக்கமே இல்லை.
போராடும்போது ஒருவர் மீதுகூட கை வைக்கக் கூடாது என அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தோம். கடந்த ஆட்சியில் கடன் வாங்கி ஊழல் செய்தார்கள். இந்த ஆட்சியில் கடன் வாங்கி மக்களுக்கு சேவை செய்துகொண்டிருக்கிறோம். அவுட் சோர்சிங் என எல்லாவற்றிலும் ஊழல் செய்திருக்கிறார்கள்." என்றார்
இந்த உரைக்குப் பிறகு கு.பாரதி உள்ளிட்ட போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.