சிங்கப்பூரில் அனைத்துலக தமிழ் நாடக திருவிழா: ஆக.28-ல் ‘காற்றினிலே வரும் கீதம்’
காற்றினிலே வரும் கீதம் நாடகத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமியாக லாவண்யா வேணுகோபால், கல்கி டி.சதாசிவமாக எம்.வி.பாஸ்கர், மகா பெரியவராக தம்பி பார்த்தசாரதி.
சென்னை: சிங்கப்பூரில் முதன்முறையாக நடத்தப்படும் அனைத்துலகத் தமிழ் நாடகத் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது.
அகம் நாடகக் குழு, பர்ப்பிள் ஆரா ப்ரொடக் ஷன்ஸ், ஆர்டி காம்பஸ் ஆகிய கலை, நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனங்கள் இணைந்து சிங்கப்பூரில் நடத்தும் அனைத்துலகத் தமிழ் நாடகத் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது.
ஆக.30-ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் மொத்தம் 8 மேடை நாடகங்கள், 6 பயிலரங்குகள், ஒரு கருத்தரங்கு ஆகியன இடம் பெற்றுள்ளன.
‘நாடகமிக்’ என்று தலைப்பில் நடத்தப்படும் இவ்விழாவில் அகம், பிளாக்ஸ்பைஸ், டிரையாங்கிள், ஏகேடி, அதிபதி ஆகிய 5 உள்ளூர்த் தமிழ் நாடகக் குழுக்கள் கைகோத்துள்ளன.
நியூசிலாந்தின் ‘இந்தியன் இன்க்ஸ், இங்கிலாந்தின் ரசா, சென்னையின் டம்மீஸ் டிராமா, லிட்டில் தியேட்டர், த்ரீ என்டர்டெய்ன்ஸ் குழுக்களும் இவ்விழாவில் இணைகின்றன.
விழா குறித்து ‘அகம்’ நாடகக் குழுவின் தலைவர் கணேஷ் சுப்பிரமணியன் கூறும்போது, “அகம் நாடகக் குழுவின், ‘கை வரிசை’, டிரையாங்கிள் குழுவின், ‘ஒரு முடிவு, ஓர் உலகம்’, பிளாக்ஸ்பைஸ் குழுவின் ‘பல்லி’ ஆகியன இடம்பெறுகின்றன.
லாவண்யா, கணேஷ்
டம்மீஸ் நாடகக் குழுவின் ‘வீழ்வேன் என்று நினைத்தாயோ?’, லிட்டில் தியேட்டரின் ‘தி குக்ஸ் - சன்னி சைட் அப்’, த்ரீ என்டர்டெய்ன்ஸின் ‘காற்றினிலே வரும் கீதம்’ ஆகிய நாடகங்களும் மேடை ஏறுகின்றன. ‘சாத்தியங்கள்’ என்ற கருப்பொருளுடன் இவ்விழா வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார்.
த்ரீ என்டர்டென்ஸ் குழுவைச் சேர்ந்த லாவண்யாகூறும்போது, “ஆக.28-ம் தேதி இரவு 7.30 மணிக்கு பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை, ‘காற்றினிலே வரும் கீதம்’ என்ற தலைப்பில் நாடகமாக இயக்கி மேடை ஏற்றுவதை பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.
எழுத்தாளர் வி.எஸ்.வி. ரமணனின் கதையை அடிப்படையாகக் கொண்ட இந்த நாடகத்துக்கு சி.வி.சந்திரமோகன் வசனம் எழுதியுள்ளார். இசை - தக் ஷின். பாடல்களை காயத்ரி வெங்கட்ராகவன் பாடியுள்ளார். என்னுடன் இணைந்து எம்.வி.பாஸ்கர் நாடகமாக்கம் செய்துள்ளார்” என்றார்.
கூடுதல் தகவல்களை https://www.nadagamic.com என்ற இணையமுகவரி மூலம் அறியலாம்.