சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள்..!
தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி பொது செயலாளர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சரித்திர சிறப்புமிக்க தீர்மானங்களை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியதாவது:-
சட்டமன்றத்தில் விளிம்பு நிலை மக்களின் மருத்துவக் கல்வியை கருத்தில் கொண்டும் மருத்துவக்கல்வி கார்ப்பரேட் மயமாவதை தடுத்து நிறுத்தும் பொருட்டும் கொண்டு வரப்பட்ட நீட் ஒழிப்பு தனித்தீர்மானம், சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூக தொண்டு நிறுவனங்களை முடக்கும் வகையில் ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்ட (எஃப்சி ஆர்ஏ) திருத்த மசோதாவிற்கு எதிரான தீர்மானம், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக் கீட்டை தாமதப்படுத்தாமல் நிறைவேற்ற வலியுறுத்தி கொண்டுவரப்பட்ட தனித்தீர்மானம், தமிழகத்தின் 7.18 சதவீத நாடாளுமன்ற பிரதிநிதித்துவ விகிதாசாரத்தை குறைக்கும் வகையில் ஒன்றிய அரசு கொண்டு வர முயற்சிக்கும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான தீர்மானம் என தமிழக முதல்வர் தலைமையிலான தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து தீர்மானங்களையும் தமிழ்மாநில பகுஜன் சமாஜ் கட்சி பாராட்டி வரவேற்கிறது.
மேலும், நம் மாநில நலன் கருதியும் மக்களின் நலன் கருதியும் இதுபோன்று எத்தகைய அரசியல் நிலைப்பாட்டை தமிழக முதல்வர் முன்னெடுத்தாலும் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி அதை வரவேற்பதோடு அரசுக்கு உறுதுணையாகவும் நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறது. தொடரட்டும் நல்லவை மட்டும். பாராட்டுகள்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.