📅 Tuesday, 25 August 2026 IST | ஆவணி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 25, 2026 10:03 AM

எம்.எல்.ஏ.,க்களுக்கு அரசு கார் தகுதியானோருக்கு வழங்குவதே சரி!

எம்.எல்.ஏ.,க்களுக்கு அரசு கார் தகுதியானோருக்கு வழங்குவதே சரி!

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு, சமீபத்தில், 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. இந்த, 100 நாட்களில் மக்களுக்கான பல நலத் திட்டங்களை அமல்படுத்தியுள்ள நிலையில், கடந்த 19ம் தேதி சட்டசபையில் பேசிய முதல்வர் விஜய், 'எம்.எல்.ஏ.,க்கள் அனைவருக்கும், அரசு சார்பில் கார் வழங்கப்படும்' என்று அறிவித்தார்; அத்துடன், 'கார் பராமரிப்பு மற்றும் உதவியாளர் படியாக, மாதம் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்' என்றும் தெரிவித்தார்.

த.வெ.க., சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்களில் பலர் எளிய பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்பதால், அவர்களில் சிலர் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் இந்த அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர்.

ஆனால், 'எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் கணிசமான மாதச் சம்பளம் மற்றும் இதர படிகள் வாங்குவதாலும், மக்கள் பிரதிநிதிகள் என்ற முறையில் வேறு பல சலுகைகள் பெறுவதாலும், தனியாக கார் வழங்குவது தேவையற்றது.

'எம்.எல்.ஏ.,க்களில் பலர் கோடீஸ்வரர்களாகவும், பல கார்கள் வைத்திருப்பவர்களாகவும் உள்ளதால், அரசு பணத்தில் கார் வழங்குவது சரியல்ல. இதனால், அரசு கஜானாவிற்கு பெரும் நிதிச்சுமை ஏற்படும்' என்று, சில தரப்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதுமட்டுமின்றி, 'அரசுக்கு எதிராக எம்.எல்.ஏ.,க்கள் குரல் கொடுக்காமல் இருக்க கொடுக்கப்படும் லஞ்சமே கார்' என்றும், சில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

அதேநேரத்தில், தி.மு.க., - பா.ம.க., - கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட கட்சிகள், 'எங்கள் எம்.எல்.ஏ.,க்களுக்கு கார் தேவையில்லை. பொருளாதார ரீதியாக நலிவடைந்த நிலையில் உள்ள எம்.எல்.ஏ.,க்களுக்கு மட்டுமே கார் வழங்க வேண்டும்' என்றும் வலியுறுத்தியுள்ளன.

தி.மு.க., உள்ளிட்ட சில கட்சிகளின் உறுப்பினர்கள் பலர் ஏற்கனவே பல முறை சட்டசபை உறுப்பினர்களாக இருந்தவர்கள்; அத்துடன், தேர்தல் நேரங்களில் பல கோடி ரூபாய் செலவு செய்யும் வகையில் தகுதியானவர்களாகவும் உள்ளதால், அவர்களின் முடிவு ஏற்கத்தக்கதே.

அதேநேரத்தில், 'ஏழையாக உள்ள மற்றும் முதல் முறை எம்.எல்.ஏ.,க்களுக்கு கார் வழங்குவதில் தவறில்லை; வசதி படைத்தவர்களுக்கு வழங்கக்கூடாது' என்பதே பொது மக்களின் கருத்தாகும்.

இந்த விஷயத்தில், எம்.எல்.ஏ.,க்களின் வசதி மற்றும் அவர்களின் பொருளாதார பின்னணி குறித்து விசாரிக்க, ஒரு குழுவை நியமிக்க வேண்டும். அந்தக் குழு எம்.எல்.ஏ.,க் களாக தேர்வானவர்கள், தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த போது, குறிப்பிட்ட சொத்து விபரங்களையும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் சொத்து விபரங்களையும், பிரமாண பத்திரங்களையும் ஆய்வு செய்ய வேண்டும்.

யார் யார் கார் பெற தகுதியானவர்கள் என்பது குறித்த உண்மை நிலவரத்தை கண்டறிந்து, தகுதியானவர்களுக்கு மட்டுமே கார் வழங்க பரிந்துரைக்க வேண்டும். அத்துடன், 'த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்களில் தகுதியானவர்கள் மட்டுமே கார் வேண்டி விண்ணப்பம் செய்வர்' என அமைச்சர்கள் தரப்பில், சட்டசபையில் அளிக்கப்பட்ட உறுதிமொழியும் காப்பாற்றப்பட வேண்டும்.

லஞ்சம், ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள முதல்வர் விஜய், லஞ்சம் கேட்போர் குறித்து புகார் கொடுக்க, 'வாட்ஸாப்' எண் அறிவித்தது உட்பட பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அந்த வகையில், மக்கள் பிரதிநிதிகளும் ஊழலில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என விரும்புகிறார். அதற்காகவே இந்த கார் பரிசு. இதை எம்.எல்.ஏ.,க்களும் உணர்ந்து நேர்மையாக செயல்பட முன்வர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.