📅 Saturday, 29 August 2026 IST | ஆவணி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 29, 2026 11:03 AM

“என் கேப்டன்சியில் ஒரு சீரீஸ் கூட தோற்கலை.. உலகக்கோப்பை வென்றோம் ஆனால்..” மனம் திறந்த சூர்யகுமார்

“என் கேப்டன்சியில் ஒரு சீரீஸ் கூட தோற்கலை.. உலகக்கோப்பை வென்றோம் ஆனால்..” மனம் திறந்த சூர்யகுமார்

“என் கேப்டன்சியில் ஒரு சீரீஸ் கூட தோற்கலை.. உலகக்கோப்பை வென்றோம் ஆனால்..” மனம் திறந்த சூர்யகுமார்

மும்பை: இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பையை வென்று தந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ், அணியில் இருந்து திடீரென நீக்கப்பட்டது குறித்து முதன்முறையாக மௌனம் கலைத்துள்ளார். அஜித் அகார்கர் தலைமையிலான தேர்வுக் குழு, சூர்யகுமாருக்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயரை அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்கான கேப்டனாக நியமித்தது.

கடந்த 2 ஆண்டுகளாக சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கில் ரன் குவிக்க திணறியதே இந்த நீக்கத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக 2025ல் அவர் சர்வதேச போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. ஆனால், இவரது தலைமையில் இந்திய அணி எந்தவொரு டி20 தொடரையும் இழந்ததில்லை.

இது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவின் யூடியூப் பக்கத்தில் சூர்யகுமார் யாதவ் பேசுகையில், "என் பெயர் அணியில் இல்லாததைக் கண்டபோது நான் சிரித்தேன். ஏனெனில் கடந்த ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளாக நான் அணியுடன் விளையாடும் போதெல்லாம், கடினமான சூழ்நிலைகளில், எனக்கு சாதகமற்ற நேரங்களில் நான் சிரித்திருக்கிறேன். நிதானமாகவே இருந்திருக்கிறேன். எனது கடந்த காலங்களில் சிறப்பாக செயல்பட எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்புகளுக்கு நான் எப்போதும் நன்றியுடன் இருக்கிறேன்

நிச்சயமாக, இப்போது நடந்துள்ள இந்த சூழ்நிலையை நான் கூட எதிர்பார்க்கவில்லை. 2026-க்கு பிறகு இந்த அணியை அடுத்த இரண்டு ஆண்டுகள் நான் தான் வழிநடத்திச் செல்லப் போகிறேன் என்று நினைத்தேன். அடுத்து ஒலிம்பிக் வருகிறது. அதன் பிறகு மற்றொரு டி20 உலகக் கோப்பை என அடுத்தடுத்து சவால்கள் காத்திருக்கின்றன. ஆனால், அதே நேரத்தில் நாம் நினைப்பதும் மற்றவர்கள் நினைப்பதும் வெவ்வேறானவை. அவர்களின் கருத்துகளையும் நாம் மதிக்க வேண்டும். எதிர்காலத்திற்கு இதுதான் சரியான முடிவு என்று அவர்கள் நினைத்ததால், இந்த முடிவை எடுத்துள்ளார்கள். அதற்கு நான் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. ஏனெனில், அது அவர்களின் முடிவு. அந்த நேரத்தில் அவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள். எனக்குப் பதிலாக வேறு ஒருவரின் தலைமையில் இந்த அணி சிறப்பாக செயல்படும் என்றால், அதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

அயர்லாந்து, இங்கிலாந்து தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட அணியை நான் பார்த்தேன். நான் ஸ்ரேயாஸ் ஐயருடன் இணைந்து நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். அவர் ஒரு சிறந்த வீரர், நல்ல மனிதர் மற்றும் ஒரு திறமையான கேப்டன் என்பதும் எனக்குத் தெரியும். எனவே, 'அவரை ஏன் கேப்டனாக்கினார்கள்?' என்ற கேள்வி என்னிடம் இல்லை. ஆனால், எனக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது உண்மைதான். ஏனெனில், கடந்த இரண்டு ஆண்டுகளாக நாம் ஒரு தொடரைக்கூட தோற்கவில்லை. உலகக் கோப்பை மற்றும் ஆசியக் கோப்பையை வென்றுள்ளோம். எல்லாம் நன்றாகச் சென்று கொண்டிருக்கும் போது, இந்த மாற்றத்திற்கு என்ன காரணம், ஏன் இந்த மாற்றம் என்ற கேள்விகள் என் மனதில் ஓடிக் கொண்டே இருந்தன. ஒன்றரை மாதங்கள் வீட்டில் சும்மா அமர்ந்திருந்தேன்.

இது எப்படி சாத்தியம், எப்படி இப்படி நடக்கலாம் என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். நாம் தான் உலகக் கோப்பையை வென்றோம். உண்மைதான், ஐபிஎல் தொடர் நான் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. நாங்கள் வீட்டில் இருந்தபோது நண்பர்களும் குடும்பத்தினரும் வந்தனர். 'இது எல்லாம் வாழ்க்கையில் சாதாரண விஷயம், விடுங்கள்' என்று ஆறுதல் கூறினர். ஆனால், அவர்கள் வீட்டிலிருந்து சென்ற பிறகு, நாம் மட்டும் தனியாக இருக்கும் போதுதான் அந்தத் தவிப்பு அதிகமாக இருந்தது

இந்திய டி20 அணி அறிவிக்கப்படுவதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே தேர்வாளர்கள் என்னை அழைத்தனர். 'அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டிய நேரம் இது' என்று என்னிடம் கூறினர். நான் அதற்கு எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. ஏனெனில், இதில் என்னுடைய தவறு எதுவும் இல்லை. சூர்யகுமார் யாதவ் எப்போதும் அப்படிப்பட்டவன் கிடையாது. அவர்கள் எடுத்த முடிவு அணியின் நன்மைக்காகத்தான் இருக்கும் என்று நினைத்திருப்பார்கள். எதிர்காலத்தில் இது நல்ல முடிவாக இருக்கும் என்று கருதி இந்த முடிவை எடுத்து, அதை என்னிடமும் தெரிவித்துவிட்டார்கள். இதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை

நான் எப்போதும் தயாராகவே இருக்கிறேன். நீங்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம். நான் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடிக்கொண்டே இருப்பேன். நிலைமை சரியாகி, சரியான நேரம் வரும்போது என்னை அழைக்கலாம்." என்று சூர்யகுமார் யாதவ் இந்தப் பேட்டியில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.