என் கொள்கையில் இருந்து ஒருபோதும் மாற மாட்டேன்: பிரியா பவானி சங்கர்
செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரையில் நுழைந்து, தமிழ்த் திரையுலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பிரியா பவானி சங்கர்.
சிவா நிர்வானா இயக்கத்தில் ரவி தேஜாவுடன் இவர் நடித்து வெளியான ‘இருமுடி’ திரைப்படம் வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கில் இவருக்கு இதுவே முதல் வெற்றித் திரைப்படமாகும்.
மற்ற நடிகைகளைப் போல இவர் அதிகத் திரைப்படங்களில் நடிப்பதில்லை.
“நான் நிறையத் திரைப்படங்களை ஒப்புக்கொள்வது கிடையாது. தனித்துவமான கதைகளில் நடித்து ரசிகர்களைக் கவரவே விரும்புகிறேன். எனது ஒவ்வொரு திரைப்படத்தையும் கவனமாகத் தேர்வு செய்கிறேன்.
“என் திரைப் பயணத்தில் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைத்து வருகிறேன். குறிப்பாக எனது திரைப்படங்களை அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். இந்தக் கொள்கையில் இருந்து ஒருபோதும் நான் மாற மாட்டேன்,” என்று அவர் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.