“என் மகனுக்கு நீதி வேண்டும்”... உதயநிதியிடம் கதறிய அமுதனின் தாய் !
“என் மகனுக்கு நீதி வேண்டும்”... உதயநிதியிடம் கதறிய அமுதனின் தாய் !
கோவையில் சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவர் அமுதனின் பெற்றோரைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
கோவை கல்லூரி மாணவர் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 6-ஆவது நாளான புதன்கிழமை பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் பொது விவாதங்களுக்கு துறை அமைச்சர்கள் பதில் அளித்த பின்னர், கோவை மாணவர் கொலை சம்பவம் தொடர்பாக பேரவைத் தலைவரிடம் தான் அளித்த கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து பேச உதயநிதி ஸ்டாலின் அனுமதி கேட்டார். அப்போது, அது குறித்து அரசுத் தரப்பில் திங்கள்கிழமை விளக்கம் அளிக்கப்படும் என அறிவித்த பேரவைத் தலைவர், அந்தச் சம்பவம் குறித்து மட்டும் பேச அனுமதித்தார்.
இதையடுத்து உதயநிதி பேசியதாவது, கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன், சக மாணவர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட கும்பலால் செவ்வாய்க்கிழமை கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதை ஏதோ ஒரு தனிநபர் சம்பவமாகப் பார்க்கக் கூடாது; இதற்கு அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும். வழக்கு விசாரணைக்காக மாணவர் அமுதனை, கோவை செட்டிப்பாளையம் காவல் துறையினர் காவல் நிலையத்துக்கு திங்கள்கிழமை அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வரும் சிலரைப் பற்றி அமுதனிடம் காவல் துறையினர் விவரங்களைக் கேட்டறிந்துள்ளனர்.
ஆனால், அவ்வாறு பெறப்பட்ட ரகசியத் தகவல்களைப் பாதுகாத்துக் குற்றவாளிகளைக் கைது செய்வதற்குப் பதிலாக, போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர்களிடமே அது குறித்த விவரத்தைக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். அந்த கோபத்தில்தான் அவர்கள், மாணவரை அடித்துக் கொலை செய்துவிட்டதாக அமுதனின் பெற்றோர் ஊடகங்களிடம் பேட்டியளித்துள்ளனர்.
காவல் துறையினர் ஏன் இவ்வளவு அலட்சியமாகச் செயல்பட்டார்கள் என்பதற்கு, அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். கடந்த 3 நாள்களில் மட்டும் இதுபோல அடுத்தடுத்து 4 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறும் காவல் துறையின் இத்தகைய அலட்சியப்போக்கு இனியும் தொடரக் கூடாது. மாணவர் அமுதனின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன்: கோவை கல்லூரியில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் மற்ற மாணவர்களுக்கும் இடையே ஏற்கெனவே இருந்த கோஷ்டி மோதல் காரணமாகவே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அமுதனின் பெற்றோர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தொலைபேசியில் அழைத்து ஆதரவு தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அமுதனின் தாயார் உதயநிதியிடம், "உதயநிதிதான் நீதி பெற்று தர வேண்டும்" என்று அமுதனின் தாயாரும் உருக்கமாகத் தெரிவித்திருந்தார். அமுதனின் மரணத்துக்குத் தன் ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொண்டார்.
மேலும் திங்கள் அன்று சட்டபேரவையில் இந்த சம்பவம் குறித்து விரிவாகப் பேசுவதாகவும் அமுதனின் மரணத்துக்கு நீதி கிடைக்கும்வரை, அமுதனின் பெற்றோருக்கு உறுதுணையாக இருந்து போராடுவதாகவும் உறுதிபட தெரிவித்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வள்ளலார் வீதியைச் சேர்ந்தவர் கென்னடி மகன் அமுதன் (19). இவர் கோவை, செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் செல்போன் பறிப்பு சம்பவத்தில் இரு தரப்புக்கு ஏற்பட்ட மோதலில் உயிரிழந்ததாக ஒரு தரப்பிலும், போதைப் பொருள் கும்பல் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததால், அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினரும் கூறுகின்றனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.