“எங்கிட்ட எங்க கேட்டாங்க?” ... மேயர் பிரியா Vs தவெக அரசு..!
“எங்கிட்ட எங்க கேட்டாங்க?” ... மேயர் பிரியா Vs தவெக அரசு..!
சென்னை மாநகராட்சி சொத்துவரியை உயர்த்தி, தவெக அரசு யாரிடமும் ஆலோசிக்காமல் தாங்களாகவே முடிவெடுத்து செயல்படுவதாக மேயர் பிரியா குற்றஞ்சாட்டியுள்ளார்.
தவெக அரசுக்கும் மேயர் பிரியாவுக்கும் இடையே மோதல்கள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது அடுத்த பூகம்பம் வெடித்துள்ளது. ஏற்கனவே சென்னை மேயர் பிரியாவுக்கும், திரு.வி.க. நகர் தவெக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். பல்லவிக்கும் இடையே கடந்த ஜூன் 4ஆம் தேதி அரசு பள்ளி நிகழ்வின்போது குத்துவிளக்கு ஏற்றுவதில் ஏற்பட்ட புரோட்டோகால் பிரச்சினை மற்றும் மெழுகுவர்த்தி விவகாரம் தொடர்பாக அரசியல் சர்ச்சை வெடித்தது.
இந்நிலையில், மற்றொரு சம்பவமாக சென்னை மாநகராட்சி சொத்துவரி உயர்த்தப்பட்டிருப்பது கடும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய மேயர் பிரியா, சொத்துவரி உயர்வு குறித்து தங்களிடம் எந்த ஆலோசனையும் மேற்கொள்ளப்படவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
முன்னதாக, மாநகராட்சி துணை மேயரும் இதே கருத்தைத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது தவெக அரசுக்கும் மேயர் பிரியாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.
மேலும், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட உள்ளாட்சி தொகுதிகளில் திமுக ஆதிக்கம் செலுத்தி, மேயர் பதவியை தன் வசம் வைத்திருக்கிறது. ஆனால், சட்டமன்றத் தொகுதிகளைப் பொறுத்தவரை தவெகவின் வெற்றிக் கொடி பறக்கிறது. எனவே, மாநகராட்சி கூட்டங்களில் எடுக்கப்படும் மக்கள் நலத்திட்டங்கள் செயல்பாட்டுக்கு வருவதில் சிக்கல்கள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மேயர் பிரியாவுக்கும் தவெக அரசுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.