IND vs SL: இலங்கை அணிக்கு 372 ரன்கள் நிர்ணயித்த இந்தியா..2வது இன்னிங்சில் 193 ரன்களில் இந்தியா அவுட்
IND vs SL: இலங்கை அணிக்கு 372 ரன்கள் நிர்ணயித்த இந்தியா..2வது இன்னிங்சில் 193 ரன்களில் இந்தியா அவுட்
காலே: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில், இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 193 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. இதன் மூலம் இலங்கை அணிக்கு 372 ரன்கள் என்ற கடினமான இலக்கை இந்திய அணி நிர்ணயித்துள்ளது.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 69 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். அவர் ஆட்டமிழந்த பிறகு இந்திய அணியின் விக்கெட்டுகள் மிக வேகமாக சரிந்தன. பண்ட் அவுட்டான பிறகு வந்த வீரர்கள் வெறும் 50 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தனர். இறுதியில் பிரசித் கிருஷ்ணாவின் விக்கெட்டை வீழ்த்திய அசிதா பெர்னாண்டோ இந்திய அணியின் இன்னிங்ஸை முடிவுக்கு கொண்டு வந்தார். இதனால் ஆட்டத்தில் தேநீர் இடைவேளை முன்கூட்டியே விடப்பட்டது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் அசிதா பெர்னாண்டோ மிகச் சிறப்பாக பந்துவீசி 31 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா 43 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இலங்கை அணியின் மூத்த வீரர் தினேஷ் சண்டிமால் தலையில் ஏற்பட்ட காயம் (Concussion) காரணமாக இந்த டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக பசிந்து சூரியபண்டார மாற்று வீரராக (Concussion Substitute) களமிறக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இந்திய அணி முதல் இன்னிங்சில் 462 ரன்கள் எடுக்க, இலங்கை அணி 284 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து 178 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி தற்போது 2வது இன்னிங்சில் 193 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனையடுத்து 372 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது. கடைசி 2 நாளில் ஆடுகளம் ஸ்பின்னருக்கு சாதகமாக உள்ளதால், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. ஆனால் குறுக்கே இந்த கவுசிக் வந்தால் என்பது போல் மழையால் ஆட்டம் தடைப்பட்டு இருக்கிறது.