📅 Thursday, 13 August 2026 IST | ஆடி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sri Lanka August 13, 2026 03:03 PM

இந்தியா தோற்றாலும் கம்பீருக்கு கவலை இல்லை.. பதவி பறிபோகாது.. IND vs SL டெஸ்ட் பற்றி பிசிசிஐ முடிவு

இந்தியா தோற்றாலும் கம்பீருக்கு கவலை இல்லை.. பதவி பறிபோகாது.. IND vs SL டெஸ்ட் பற்றி பிசிசிஐ முடிவு

இந்தியா தோற்றாலும் கம்பீருக்கு கவலை இல்லை.. பதவி பறிபோகாது.. IND vs SL டெஸ்ட் பற்றி பிசிசிஐ முடிவு

மும்பை: இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஒருவேளை தோல்வியைத் தழுவினாலும், தலைமைப் பயிற்சியாளர் பதவியில் கவுதம் கம்பீர் தொடர்ந்து நீடிப்பார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. பிசிசிஐ எப்படி இந்த முடிவை எடுத்தது என்பதன் பின்னணியில் ஒரு முக்கிய காரணம் உள்ளது.

ராகுல் டிராவிட்டின் பயிற்சியாளர் பதவிக்கான காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, 2024-ஆம் ஆண்டு கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். அவரது வழிகாட்டுதலின் கீழ் இந்திய அணி 2025 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2026 டி20 உலகக் கோப்பை என இரண்டு முக்கியமான ஐசிசி கோப்பைகளை வென்று அசத்தியுள்ளது.

அதே நேரத்தில், டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பீரின் பயணம் சில கடுமையான சவால்களையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக உள்நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்தியா 0-2 என்ற கணக்கில் முழுமையாக இழந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இலங்கை டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்தால், கம்பீருக்குப் பதிலாக விவிஎஸ் லக்ஷ்மண் இடைக்காலப் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் பரவின. ஆனால், அத்தகைய மாற்றங்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று பிசிசிஐ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அதற்கு காரணம், இந்திய டெஸ்ட் அணியில் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் ஆகியோர் ஓய்வு பெற்றதால் சுப்மன் கில் தலைமையிலான அணி வெற்றிப் பாதைக்கு வர சில காலம் ஆகும் என பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

அதன் காரணமாகவே இலங்கை தொடரில் தோற்றாலும் கம்பீரின் பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, விவிஎஸ் லக்ஷ்மண் பயிற்சியாளராக வருவதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. முன்னதாக 2024-ஆம் ஆண்டிலேயே தலைமைப் பயிற்சியாளர் பதவியை ஏற்க லக்ஷ்மண் மறுத்திருந்தார். தற்போது பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தின் தலைவராகச் செயல்பட்டு வரும் அவர், தனது தற்போதைய பதவியிலேயே நீடிக்க விரும்புகிறார்.

இந்திய கிரிக்கெட்டில் வெவ்வேறு வடிவங்களுக்கு தனித்தனி பயிற்சியாளர்களை நியமிக்கும் வழக்கம் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. எனவே, கம்பீரின் முழு ஒப்பந்த காலத்திற்கும் அவரே அணியை வழிநடத்துவார். குறிப்பாக ஒருநாள், டி20 போட்டிகளைப் பொறுத்தவரை, குறைந்தது 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரை கம்பீரே தலைமைப் பயிற்சியாளராகத் தொடருவார் என்பது உறுதியாகியுள்ளது.