"குப்பையோ குப்பை"..விஷாலின் ‘மகுடம்’ படத்தை கழுவி ஊற்றிய பயில்வான் ரங்கநாதன்!
சென்னை: நடிகர் விஷால் தானே இயக்கி, கதாநாயகனாக நடித்திருக்கும் 'மகுடம்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் அவருடன் அஞ்சலி, துஷாரா விஜயன், ஜான் விஜய், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில், ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் குறித்து மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் அளித்த காரசாரமான விமர்சனத்தைப் பற்றி இங்கே பார்ப்போம்:
'நாயகன்' பாணி ஓபனிங்: படம் ஆரம்பிக்கும்போதே மணிரத்னத்தின் 'நாயகன்' படத்தை நினைவூட்டும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சோற்றுக்கு வழியில்லாமல் ஒரு சிறுவன் திருட, அவனை மற்றொரு சிறுவன் காப்பாற்றுகிறான். அவர்கள் இருவரிடமிருந்தும் வேறு ஒருவன் அதை பறித்துச் செல்கிறான். கடற்கரையில் அமர்ந்து பேசும் அந்தச் சிறுவர்களில் ஒருவன், ஒரு நாள் இந்த பெரிய கப்பலையே நான் விலைக்கு வாங்குவேன், அதுதான் என் கனவு எனக் கூறுவதுடன் அந்த காட்சி முடிகிறது.
மகுடம் கதை: கதையில் விஷால் ஒரு சாதாரண மெடிக்கல் ரெப்ரசென்டேட்டிவாக வருகிறார். ஆனால், தனது மாமனாரான தம்பி ராமையாவிடம் பெரிய சம்பளம் வாங்குவதாகப் பொய் சொல்லி, துஷாரா விஜயனைத் திருமணம் செய்கிறார். ஒரு குழந்தை பிறந்த பின், மனைவியின் ஆசையை நிறைவேற்றக் கடன் வாங்கி பி.எம்.டபிள்யூ (BMW) கார் ஒன்றை வாங்குகிறார். அந்த காரில் ஊட்டிக்குச் செல்லும் வழியில் ஒரு பெரிய கும்பல் அவர்களைத் தாக்கி, மனைவியையும் மகளையும் கொல்கிறது. விஷால் தனது மகனுடன் தப்பிக்கிறார். அதன்பின் அஞ்சலி கதைக்குள் வருகிறார். விஷாலின் மனைவியையும் மகளையும் கொலை அந்த கும்பல் எதற்காக கொலை செய்தார்கள் என்பதை நோக்கி கதை நகர்கிறது.
குப்பையோ குப்பை: விஷால் 'மகுடம்' படத்தை ஒரு முழுமையான கமர்ஷியல் படமாக எடுக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால், அது கமர்ஷியல் படமாக அமையவில்லை. கதை பெரிதாக மனதில் ஒட்டவே இல்லை. சண்டைக்காட்சிகளிலும் நடனக்காட்சிகளிலும் மட்டுமே விஷால் நன்றாக நடித்திருக்கிறார். துஷாரா விஜயன் சில காட்சிகளிலேயே வந்து இறந்துவிடுகிறார். ஒட்டுமொத்தமாக சொல்லப்போனால் 'மகுடம்' படம் குப்பையோ குப்பை" என்று கடுமையாகச் சாடியுள்ளார்.