குடிநீர் முதல் வழக்கு ரத்து வரை... விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
குடிநீர் முதல் வழக்கு ரத்து வரை... விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் இன்று, குடிநீர் திட்டங்கள், டிஜிட்டல் லைசென்ஸ் முதல் போராட்ட வழக்குகள் ரத்து என அதிரடியான அறிவிப்புகளை அறிவித்தார் முதலமைச்சர் விஜய்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய், 110 விதியின் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
நகர்ப்புற வளர்ச்சி, குடிநீர் வசதி, டிஜிட்டல் லைசசென்ஸ் வசதி, கழிவுநீர் மேலாண்மை, சாலை மேம்பாடு மற்றும் போராடியவர்கள் மீதான வழக்கு ரத்து உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் அறிவித்தார்.
சட்டப்பேரவை இன்று கூடியதும் வழக்கம்போல் கேள்வி நேரம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பால்வள மேம்பாட்டுத் துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்புகள்:
சட்டப்பேரவையில் கேள்வி நேரம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
நகர்ப்புற குடிநீர் வசதிக்கு புதிய திட்டங்கள் :
தமிழ்நாட்டின் நகர்ப்புற பகுதிகளை சுகாதாரமான மற்றும் மேம்பட்ட நகரங்களாக மாற்றும் வகையில் பாதுகாப்பான குடிநீர் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.
வடசென்னை, ஆவடி, பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் புதிய குடிநீர் திட்டங்கள் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது.
சென்னை மீஞ்சூரில் ரூ.4,800 கோடி மதிப்பீட்டில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஆவடி, சென்னை பகுதிகளில் குடிநீர் திட்டங்கள் :
ஆவடி மாநகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் நோக்கில் ரூ.500 கோடி செலவில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்திறனை அதிகரிக்கும் வகையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், பழமையான 33 குடிநீர் திட்டங்கள் சீரமைக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.
டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம்:
ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவு சான்றிதழ் பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தை குறைக்கும் வகையில், அவை இனி டிஜிட்டல் முறையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் பதிவேற்றப்படும் இந்த ஆவணங்களை பயனாளர்கள் எளிதாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். மேலும், ஆவணங்கள் தொலைந்து போனாலும் மீண்டும் பதிவிறக்கம் செய்யும் சுலபமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பாதாள சாக்கடை திட்டங்களுக்கு முக்கியத்துவம் :
குன்றத்தூர், கூடுவாஞ்சேரி, நந்திவரம் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
மதுரை மற்றும் கடலூர் மாநகராட்சிகளில் குடிநீர் திட்டங்களை மேம்படுத்த ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
சென்னையில் குடிநீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகளை மேம்படுத்த ரூ.210 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், நாகர்கோவில் மாநகராட்சியில் விடுபட்ட மற்றும் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்.
சாலை மற்றும் நகர்ப்புற வளர்ச்சி திட்டங்கள் :
சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து நகரப்பகுதிகளிலும் சாலைகளை மேம்படுத்த ரூ.1,850 கோடி மதிப்பீட்டில் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
மதுரை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டங்களை மேம்படுத்த ரூ.2,400 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
கழிவுநீர் மேலாண்மை, பூங்கா மற்றும் பள்ளி கட்டிட திட்டங்கள் :
நெல்லை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் மின்உற்பத்தி திட்டங்களுக்கு ரூ.256 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளை சுற்றியுள்ள சாலைகளில் மாணவர்கள் பாதுகாப்பாக நடந்து செல்லும் வகையில் பிரத்யேக நடைபாதைகள் அமைக்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரூ.305 கோடி செலவில் புதிய பூங்காக்கள் உருவாக்கப்படும்.
மேலும், அரசு பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்ட ரூ.335 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.
ஆசிரியர்கள், விவசாயிகள் மீதான வழக்குகள் ரத்து :
வாழ்வாதார கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மற்றும் விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவதாக தெரிவித்த அவர், ஆசிரியர்கள் மற்றும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஆதரவாக இருக்கும் என்றும் உறுதியளித்தார்.
மொத்தத்தில், நகர்ப்புற உள்கட்டமைப்பு, குடிநீர் வசதி, சுகாதாரம் மற்றும் கல்வி கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.