மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்வது தொடர்பாக கோர்ட்டில் விசாரணை
நாடு முழுதும், 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு அணுகியது.இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத்தேர்வின் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சராக இருந்த பா.ஜ.,வைச் சேர்ந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, தலைநகர் டில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில், கரப்பான்பூச்சி கட்சியினர், ஒரு மாதத்துக்கும் மேல் போராட்டம் நடத்தினர். இதே போல் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். சில இடங்களில் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டது.இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட மற்றும் குற்றப் பின்னணி இல்லாதவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யும்படி அறிவுறுத்தினார்.இந்நிலையில், மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், 'மாணவர்களின் எதிர்காலத்தை கருதி, உச்ச நீதிமன்றத்திற்கு மட்டுமே உரித்தான சிறப்பு அதிகாரமான அரசியலமைப்பு சட்டப் பிரிவு - 142ஐ பயன்படுத்தி, அவர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தலைமை நீதிபதி அமர்வில் இக்கோரிக்கையை முன்வைத்து, மனுவை அவசரமாக விசாரிக்க கோரினார். இதை அமர்வு ஏற்றது. இந்த மனு, விசாரணைக்கு வருகிறது.பேரணிக்கு தடை விதிக்க மறுப்பு டில்லியில் வரும் 5ல், கரப்பான்பூச்சி கட்சி சார்பில், இந்தியா கேட் முதல் டில்லி காவல் துறை தலைமையகம் வரை அமைதி பேரணி நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ஒருவர் மனு தாக்கல் செய்தார். அதில், பேரணி நடக்கும் அதே காலத்தில், டில்லியில், 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடக்கிறது. எனவே பேரணிக்கு தடை விதிக்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, பேரணிக்கு தடை விதிக்க மறுத்தது. “போராட்டம் காரணமாக சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என, தற்போதே அனுமானிக்க முடியாது. அனைவரும் பொறுப்புடன் சட்டத்திற்கு உட்பட்டு நடந்து கொள்வர் என்ற நம்பிக்கை உள்ளது,” என, தலைமை நீதிபதி சூர்யகாந்த் குறிப்பிட்டார்.