📅 Thursday, 20 August 2026 IST | ஆவணி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 20, 2026 10:04 PM

மசினகுடி: 11 நாளில் 3 பெண் யானைகள்; எல்

மசினகுடி: 11 நாளில் 3 பெண் யானைகள்; எல்

மசினகுடி: 11 நாளில் 3 பெண் யானைகள்; எல்-நினோ தாக்கத்தால் வறட்சியில் அடுத்தடுத்து மடியும் பேருயிர்

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி சுற்றுவட்டாரப்‌ பகுதிகளில் கடந்த 11 நாள்களில் 3 யானைகள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

எல்-நினோ தாக்கம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டுக்கான தென்மேற்கு பருவமழை பொய்த்திருக்கிறது. சமவெளி பகுதிகளுக்கு இணையாக ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதுடன் வறட்சியின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீர்நிலைகள் வறண்டு வரும் நிலையில் குடிநீர்,

வேளாண்மை போன்றவற்றிற்கான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. அதேவேளையில் வனங்களில் உள்ள நீரோடைகளும் வறண்டு வருவதால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி இடம்பெயரும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக யானைகள் தண்ணீரின்றி தவித்து வருகின்றன. முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் கடுமையான வறட்சி நிலவி வருவதால், கடந்த 11 நாள்களில் 3 யானைகள் உயிரிழந்துள்ளன.

இது குறித்து பேசும் வனத்துறை அதிகாரிகள், " மசினகுடி வனச்சரகத்திற்கு உட்பட்ட குதிரை பாறை பகுதியில் பெண் யானை ஒன்று இறந்துக்கிடந்ததை நேற்று கண்டறியப்பட்டது. அதேபோல் மாவனல்லா அருகில் உள்ள அரலட்டிகோட்டை வனப்பகுதியில் மற்றொரு பெண் யானை இறந்து கிடப்பதை இன்று கண்டறிந்துள்ளோம். கடந்த 8- ம் தேதியும் ஒரு பெண்‌ யானை இறந்தது குறிப்பிடத்தக்கது. வறட்சி காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்‌. உடற்கூறாய்வு முடிவுகள் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.

இது குறித்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்பாட்டாளர்கள், " மழைப்பொழிவின்மை, கடும் வெயில் காரணமாக சீகூர், ஆனைக்கட்டி ஆறுகள் வறண்டுள்ளன. யானைகள் தண்ணீர் கிடைக்காமல் உயிரிழந்து வருகின்றன. அதிக தண்ணீர் தேவைப்படும் உயிரினமான யானைகளைப் பாதுகாக்கும் வகையில் வனப்பகுதிகளில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியை வனத்துறை உடனடியாக முன்னெடுக்க வேண்டும்" என்றனர்.