வெளிநாட்டு ஊழியர் கொள்கையில் மாற்றமில்லை; கடை உரிமையாளர்களின் கருத்து
வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கவனத்துடனும் கட்டுப்பாட்டுடனும் நிர்வகிக்கப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தேசிய தினப் பேரணி உரையில் தெரிவித்ததை அடுத்து, முதலாளிகளின் கருத்துகளை அறிந்துவந்தது தமிழ் முரசு.
வணிகங்கள் ஊழியர்கள் பற்றாக்குறையால் சிரமங்களைச் சந்தித்து வருவதாகவும் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தொடர்ந்து முயற்சி எடுத்து வருவதாகவும் ஸ்ரீ முருகன் மளிகைக் கடையின் உரிமையாளர் கே. எம். ராமலிங்கம் கூறினார்.
‘‘சேவைத் துறைகளில் உள்ள வேலைகளில் சிங்கப்பூரர்களைப் பணியமர்த்துவது சவாலாக இருக்கிறது. புதிய தலைமுறையினர் அலுவலக வேலைகளை எதிர்பார்க்கின்றனர். எனது ஊழியர்களில் 70 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் வெளிநாட்டு ஊழியர்கள்,” என்று தாம் எதிர்நோக்கும் சவால்களை விவரித்தார் திரு ராமலிங்கம்.
குறிப்பாகச் சில்லறை விற்பனை, உணவகத் துறைகளில் தொடர்ந்து சவால்கள் இருப்பதாகச் சொன்ன அவர், தொழிலை விரிவுபடுத்துவதற்கு மிகச் சிரமமாக இருப்பதாகவும் கூறினார்.
இதற்கிடையே, பிரதமரின் அறிவிப்புக்குப் பிறகு பேசிய அன்னை சூப்பர் மார்ட் அங்காடியின் இயக்குநர் ஆரோக்கிய சேவியர், “சிங்கப்பூரர்களைப் பெரும்பான்மையினராக வைத்திருக்க அரசாங்கம் எண்ணுவது நியாயமானதுதான். கடை உரிமையாளர்களாகிய நாம் அதற்கு ஏற்றபடிச் செயல்படுவோம்,’’ என்றார்.
இருந்தாலும், தம்மைப் போன்ற முதலாளிகளுக்கு வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்துவதன் தொடர்பில் கூடுதல் சலுகைகள் கிடைத்தால் உதவியாக இருக்கும் என்றும் திரு சேவியர் கூறினார்.
‘‘உதாரணத்திற்கு, ஒவ்வோர் ஊழியருக்கும் நாங்கள் செலுத்தும் தீர்வை குறைக்கப்பட்டால் எங்களுக்கு மிக உதவியாக இருக்கும்,” என்றார் திரு சேவியர்.