📅 Monday, 24 August 2026 IST | ஆவணி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 24, 2026 03:04 PM

மக்களே உஷார்! இன்றோடு முடிகிறது அவகாசம்

மக்களே உஷார்! இன்றோடு முடிகிறது அவகாசம்

வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) இணைப்புகளுக்கு மின்னணு முறையில் வாடிக்கையாளர் விவரங்களைச் சரிபார்க்கும் e-KYC நடைமுறையை நிறைவு செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் (ஆகஸ்ட் 23) நிறைவடைகிறது. இந்தச் சரிபார்ப்பை உடனடியாக முடிக்காவிட்டால் சமையல் எரிவாயு மானியம் நிறுத்தப்படுவதோடு, சிலிண்டர் முன்பதிவு செய்வதிலும் சிக்கல்கள் ஏற்படும் என எண்ணெய் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

இன்றே கடைசி நாள்

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தங்களது வாடிக்கையாளர்கள் அனைவரும் e-KYC நடைமுறையை உடனடியாக நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளன. முறைகேடான எரிவாயு இணைப்புகளைக் கண்டறியவும், தகுதியான பயனாளிகளுக்குச் சென்றடைய வேண்டிய மானியம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் இந்தச் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இதனைச் செய்யாத பட்சத்தில், வீட்டு உபயோக விலையில் சிலிண்டர்கள் வழங்குவது நிறுத்தப்பட்டு, வர்த்தக ரீதியிலான அதிகக் கட்டணம் செலுத்த நேரிடும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

மானியம் நிறுத்தப்படும் அபாயம்

மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் சமையல் எரிவாயு மானியத் தொகையானது பயனாளி கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது. e-KYC நடைமுறை முடிவடையாவிட்டால், இந்த மானியத் தொகை ரத்து செய்யப்படும். மேலும், புதிய சிலிண்டர் முன்பதிவு செய்ய முயலும் போது, கணக்கு முடக்கப்பட்டதாகக் காட்டி முன்பதிவு நிராகரிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

சரிபார்ப்பை எளிதாக நிறைவு செய்வது எப்படி?

வாடிக்கையாளர்கள் தங்களின் எரிவாயு விநியோகஸ்தர் அலுவலகத்திற்கு நேரில் சென்று, தங்களின் ஆதார் அட்டை மற்றும் எரிவாயு இணைப்பு அட்டையைக் காண்பித்து கைரேகை அல்லது விழித்திரை பதிவு மூலம் e-KYC சரிபார்ப்பை உடனடியாக முடித்துக் கொள்ளலாம்.

இதுதவிர, அந்தந்த எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ கைப்பேசி செயலி மூலமாகவும், ஆதார் முக அடையாளச் சரிபார்ப்பு முறையைப் பயன்படுத்தி வீட்டிலிருந்தபடியே ஆன்லைனிலும் சில நிமிடங்களில் இச்சேவையை நிறைவு செய்ய முடியும்.

கடைசி நேர நெரிசலைத் தவிர்க்கவும், சமையல் எரிவாயு சேவையில் எவ்விதத் தடங்கலும் ஏற்படாமல் இருக்கவும் பொதுமக்கள் உடனடியாகத் தங்களின் e-KYC நடைமுறையை நிறைவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.