📅 Wednesday, 02 September 2026 IST | ஆவணி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 02, 2026 01:03 AM

நேபாள வெள்ளப் பேரிடர்: இதுவரை 12,000 பேர் மீட்பு; 1,000

நேபாள வெள்ளப் பேரிடர்: இதுவரை 12,000 பேர் மீட்பு; 1,000

காத்மாண்டு: நேபாள வெள்ளப் பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,003 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், இதுவரை 12,000 பேர் மீட்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

நேபாளத்தின் வடக்கே திபெத் எல்லையை ஒட்டிய பகுதியில் பனி பாறைகள் சரிந்ததால் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி போட்டேகோஷி ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சுனாமியைப் போன்று தாக்கிய இந்த ஆற்று வெள்ளத்தில் ஏராளமான வீடுகள், வாகனங்கள், சாலைகள், பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. பல்வேறு நீர்மின் திட்டங்களும் சேதமடைந்தன.

இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கி ஏராளமான பொதுமக்களும், கயிலாய யாத்திரை மேற்கொண்ட பக்தர்களும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் குறித்து நேபாளத்தின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,003 ஆக அதிகரித்துள்ளது. சித்வான், நவல்ப்பராசி கிழக்கு, நவல்ப்பராசி மேற்கு, நுவாகோட், கோர்கா, தடிங், ரசுவா, தனஹுன் ஆகிய எட்டு மாவட்டங்களில் இருந்து உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சுமார் 4,000 பேரை இன்னும் காணவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இழப்பீட்டைப் பெறுவதற்கான முயற்சி:

சுற்றுச்சூழல் தாக்கம் காரணமாக ஏற்பட்ட இந்த வெள்ளப் பெருக்கு, கரியமில வாயுக்களை அதிக அளவில் வெளியிடும் நாடுகளிடம் இருந்து கோர நேபாள அரசு ராஜதந்திர முயற்சிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிசிர் கனால், “இந்த திடீர் வெள்ளத்துக்கு கரியமில வாயுக்களை வெளியிடும் நாடுகளிடம் இருந்து இழப்பீட்டைப் பெறுவதற்கான முயற்சியை நேபாளம் தொடங்கியுள்ளது. பேரிடருக்குப் பிறகான உதவிகள் தர்மம் என்ற அடிப்படையில் அல்லாமல், அறம் சார்ந்த பொறுப்பு என்ற அடிப்படையில் அணுகப்பட வேண்டும்.

கரியமில வாயுக்களை வெளியிடுவதில் நேபாளத்தின் பங்கு மிகக் குறைவாக உள்ள போதிலும், பனிப்பாறைகள் வேகமாக உருகுவதால் மலைப்பகுதிகளில் ஏற்படும் தீவிர பேரிடர்களின் அதீத விளைவுகளை நேபாளம் எதிர்கொண்டு வருகிறது.

நாங்கள் உருவாக்காத ஒரு உலகளாவிய நெருக்கடிக்கான மிகக் கடுமையான விலையை நாங்கள் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். பனிப்பாறைகள் வேகமாக உருகுவதும், மலைப்பகுதிகளில் ஏற்படும் இத்தகைய பேரழிவு சுனாமிகளும் உலகளாவிய காலநிலை மாற்றத்தின் நேரடி விளைவே” என்று தெரிவித்துள்ளார்.