தெரு நாய் பிரச்னைக்கு தீர்வு: மத்திய அரசுக்கு ஐகோர்ட் கெடு
சென்னை: தெரு நாய் பிரச்னையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய, மத்திய அரசுக்கு இறுதி கெடு விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பஸ், ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில், இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக பிடிக்கப்படும் நாய்களை, மீண்டும் அதே பகுதிகளில் விடாமல், பராமரிப்பு மையங்களுக்கு அனுப்ப வேண்டும்' என உச்ச நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மேலும், அனைத்து மாவட்டங்களிலும் போதுமான இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையங்களை ஏற்படுத்த வேண்டும்; கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பஸ், ரயில் நிலையங்களில் திரியும் தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட உத்தரவு களையும் பிறப்பித்தது.
இந்த உத்தரவுகளை அமல்படுத்தும் வகையில், அனைத்து உயர் நீதிமன்றங்களும் தாமாக முன்வந்து வழக்கு களை விசாரணைக்கு எடுத்து, கண் காணிக்கவும் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, அறிக்கை தாக்கல் செய்யுமாறு, மத்திய அரசு மற்றும், தமிழகம், புதுச்சேரி மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில், அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.
'கடந்த முறையும் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்துக்கு, இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டி உள்ளது' என கூறிய நீதிபதிகள், இரண்டு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்க, மத்திய அரசுக்கு கெடு விதித்தனர்.