தி.மு.க.,வில் பதவி பறிபோகும் யாரையும் கைவிடப்போவதில்லை: ஸ்டாலின் உறுதி
சென்னை: தி.மு.க.,வின் மறுசீரமைப்பு தலைமை நிலைய பிரதிநிதிகள் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது.
அதில், ஸ்டாலின் பேசியதாவது: பிரதிநிதிகள் அனைவரும், மாவட்டங்களுக்கு சென்று, எந்தவித அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், அவரவர் பணிகளை சரியாக செய்ய வேண்டும். கட்சியின் அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்க வேண்டும்.
'கிளை முதல் தலைமை வரைக்குமான பொறுப்புகளுக்கு, தேர்தல் தான் நடக்கும் என, ஸ்டாலின் அறிவித்துள்ளதால், நேர்மையான தேர்தலாக நடக்கும்' என, கட்சியினரிடம் சொல்ல வேண்டும்.
செயற்குழு தீர்மானங்களின் அடிப்படையில், பலருக்கு பதவி பறிபோகும். எனினும், அவர்கள் யாரையும் கைவிடப்போவதில்லை. 'அனைவருக்கும் தகுதிக்கேற்ப வேறு பதவிகளை வழங்கும் வகையில் ஸ்டாலின் முடிவெடுப்பார்' என்பதையும் எடுத்து சொல்லுங்கள்.
மறுசீரமைப்பு பணி முடிந்த பின், உறுப்பினர் சேர்க்கை தொடங்க வேண்டும். வேர்கள் வலிமையாக இருந்தால்தான், ஆலமரம் உறுதியாக நிற்கும். நம் கட்டமைப்பு தான் நம்மை தாங்கி நிற்கும் ஆணிவேர். அதை பலப்படுத்தும் பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கொள்கையற்ற, கட்டமைப்பு இல்லாத கட்சிகள் வரும், போகும். மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது; சூரியன் தான் நிரந்தரம். கட்சியை மறு சீரமைப்போம்; மீண்டும் வெல்வோம். இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.