தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை குறித்த தனி தீர்மானம் நிறைவேறியது!
சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை தரும் வகையில், 'பொது நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட வேண்டும்' என்ற தீர்மானம், சட்டசபையில் நேற்று அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை முன்மொழிந்து, முதல்வர் விஜய் பேசியதாவது:
தமிழ் என்பது மொழி மட்டுமல்ல; பேசினால் வரும் ஓசை மட்டுமல்ல. அது நம் உயிர், உணர்வு. பெற்ற தாயை அம்மா என்று சொல்லும் போது, பாசமும், உணர்வும் நம் மனதில் உள்ளுக்குள் தோன்றும்; அதுபோலவே தாய்மொழி தமிழும்.
தாய் மிகப்பெரிய புனிதம் என்றால், தாய் தமிழ் பற்றி சொல்லவா வேண்டும். தாயை போற்றும் தமிழக மண், தமிழ்த்தாய் வாழ்த்தை விட்டு விடாது. தமிழ் பேசாத நாடுகள் மிகவும் குறைவு.
தமிழ் என்பது மொழி மட்டுமல்ல; அது நாகரிகம், சிந்தனை, அன்பு. தமிழின் புகழைத்தான் தமிழ்த்தாய் வாழ்த்து சொல்கிறது. எந்த மதம், மொழி, இனமும், தனி மனிதனை தாழ்த்தி பேசவில்லை.
ஒவ்வொருவருக்கும் தனிப்பெயர் இருக்கும். பெயரை சொன்னால், ஒருவர் தான் திரும்பி பார்ப்பார். தமிழ் என்று சொன்னால், ஒட்டுமொத்தமாக திரும்பி பார்ப்போம். அப்படி இருக்கும் பொதுப்பெயர் தான் தமிழ்.
மிகப்பெரிய வரலாற்றை உயர்த்திப் பிடிக்கும் தமிழை பின்னால் தள்ளினால், தமிழகம் எப்படி பொறுத்திருக்கும்; ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றாக வந்து நிற்கும்.
உலகத்தில் தோன்றிய மொழிகள் எல்லாம் காலப்போக்கில் மறைந்து விட்டன. தமிழ் காலம் காலமாக நிலைத்து நிற்கிறது. தமிழ் மொழியின் அடையாளம் தான், தமிழ்த்தாய் வாழ்த்து. நம் மாநிலத்தில், அது தான் முதலிடத்தில் இருக்க வேண்டும்.
இந்திய அரசியல் சாசனத்தில் மாநில மொழிகளுக்கும், பண்பாட்டிற்கும், பாரம்பரியத்திற்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டு உள்ளது.
கடந்த 1970 முதல், தமிழகத்தின் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது மரபாக உள்ளது. அதை பின்பற்றுவதில், நம் அரசு சமரசம் செய்யவே செய்யாது. எனவே, இந்த தீர்மானத்திற்கு கட்சி வேறுபாடின்றி, அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் ஆதரவு தர வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
தி.மு.க., கோவி.செழியன், அ.தி.மு.க., பழனிசாமி, காங்கிரஸ் - அமைச்சர் விஸ்வநாதன், வி.சி.க., - அமைச்சர் வன்னி அரசு, முஸ்லிம் லீக் - அமைச்சர் ஷாஜகான், பா.ம.க., சிவகுமார், இந்திய கம்யூ., மாரிமுத்து, த.வெ.க., - அமைச்சர் ராஜ் மோகன், மார்க்சிஸ்ட் கம்யூ., செல்லசாமி உள்ளிட்டோர் தீர்மானத்தை வரவேற்று பேசினர். இதையடுத்து, தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
முதல்வர் முன்மொழிந்த தீர்மான விபரம்: தமிழ், உலகின் தொன்மை வாய்ந்த செம்மொழியாகவும், தமிழர் நாகரிகம் உலகின் மிக பழமையான பயன்பாட்டு மரபுகளில் ஒன்றாகவும் திகழ்வதை, இந்த சட்டசபை பெருமையுடன் பதிவு செய்கிறது. மனோன்மணியம் சுந்தரனாரால், 1891ம் ஆண்டு எழுதப்பட்ட, 'மனோன்மணீயம்' என்ற நாடக நுாலில் இருந்து எடுக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து, '1970 நவம்பர் 23 முதல், அரசு விழாக்களில் பாடப்பட வேண்டும்' என, அரசாணை வெளியிடப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. கடந்த 2021 டிசம்பர் 17 முதல், மாநில பாடலாக அதிகாரபூர்வமாக அங்கீகாரம் வழங்கப்பட்டு, தமிழகத்தில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைகள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு தொடங்குவதற்கு முன், தமிழ்த் தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படும் என்று ஆணையிடப்பட்டு உள்ளது . இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தால், கடந்த ஜூலை 9ம் தேதி வெளியிடப்பட்ட கடிதத்தில், மாநில பாடல் பாடப்படுவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 1970களில் இருந்து அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முதலில் பாடப்படுவது மரபு தன்மையாகவும், அரசாணைகளின் வாயிலாகவும் பின்பற்றப்பட்டு வருகிறது. எனவே, தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ் மொழிக்கும், தமிழர் பண்பாட்டிற்கும் செலுத்தப்படும் மரியாதையின் வெளிப்பாடு என்பதை, சட்டசபை வலியுறுத்துகிறது. இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில், தமிழகத்தின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில், தமிழக கல்வி நிறுவனங்கள், பல்கலைகள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில், தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும். இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகளை, தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தொடங்குவதை உறுதி செய்ய, அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி, சென்னையைச் சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொது நல மனு: தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகள், தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தொடங் கப்படுவதும், தேசிய கீதம் இசைத்து நிறைவு செய்யப்படுவதும், பல ஆண்டுகளாக மரபாக உள்ளது . இந்த நடைமுறை நீர்த்துப் போகும் வகையில், அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரமும், தேசிய கீதமும் பாடப்பட்ட பின்னரே, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகிறது .
வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வலியுறுத்தி, மத்திய அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும்; எதிர்காலத்தில் அரசு நிகழ்ச்சிகளில் இந்த கலாசார மோதலை தவிர்க்கும் வகையில், தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதற்கு அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ''மத்திய உள்துறை அமைச்சகம் புதிய அறிவிப்பாணையை பிறப்பித்துள்ளது என்பதால், இந்த வழக்கு செல்லத்தக்கது அல்ல.
''மத்திய அரசு அறிவிப்பாணையில், அரசு நிகழ்ச்சிகளில் முதலில் வந்தே மாதரமும், அதைத் தொடர்ந்து தேசிய கீதமும் பாடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாநில பாடலான தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாட வேண்டும் என அறிவிப்பாணையில் வற்புறுத்தவில்லை,'' என்றார்.