தொகுதி மறுவரையறை: அச்சமும், விளக்கமும்
-- நமது சிறப்பு நிருபர் -
நம் நாட்டில் கடந்த 1952, 1963, 1973 மற்றும் 2002 ஆகிய காலகட்டங்களில் என, இதுவரை நான்கு முறை தொகுதி மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. எனினும், மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் கடைசியாக 1971ல் தான் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டு, 543 லோக்சபா தொகுதிகள் என தீர்மானிக்கப்பட்டது.
குடும்ப கட்டுப்பாட்டு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய தென் மாநிலங்கள், லோக்சபாவில் பிரதிநிதித்துவத்தை இழந்துவிடக் கூடாது என்பதற்காக, எமர்ஜென்சி காலமான 1976ல் அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா, சட்டத் திருத்தம் மூலம் தொகுதி மறுவரையறை எண்ணிக்கையை முடக்கினார்.
இந்த சட்டத்திருத்தம் 2001 வரை அமலில் இருந்த நிலையில், மீண்டும் 2002ல் வாஜ்பாய் அரசு மேலும் 25 ஆண்டு களுக்கு நீட்டித்தது. தற்போது தொகுதி மறுவரையறை தொடங்கப்படும் நிலையில், மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப் படுத்திய தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்கள் குறைவான லோக்சபா எம்.பி.,க்களையே பெறும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
அந்த வகையில், தென் மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு அரசியல், பொருளாதார மற்றும் சமூக காரணங்கள் இருக்கின்றன.
* தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் தென் மாநிலங்களின் உரிமை, பிரதிநிதித்துவம் சற்றும் குறையாது என, லோக் சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார்
* 50 சதவீத கூடுதல் இடங்கள் மாதிரியில், லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை 543ல் இருந்து 816 ஆக உயரும். இதனால், அனைத்து மாநிலங்களின் தொகுதிகளும் ஒரே சீராக 50 சதவீதம் வரை அதிகரிக்கும்.
* தென் மாநிலங்களில் மட்டும் தொகுதிகள் எண்ணிக்கை 129ல் இருந்து 195 ஆக உயரும்
* பார்லி.,யில் தென் மாநிலங்களின் ஒட்டுமொத்த பங்கு 24 சதவீதம். தொகுதி மறுவரையறைக்கு பின்னரும் அதே நிலை தொடரும்
* பழைய நடைமுறையின்படி தொகுதிகள் மறுவரையறை செய்தால், மக்கள் தொகையை கட்டுப் படுத்திய மாநிலங்களுக்கு தொகுதிகள் குறைய வாய்ப்பு இருந்தது
* புதிய சட்ட வரைவின் மூலம் எந்த மாநிலத்தின் தொகுதிகளும் குறையாது; எண்ணிக்கையில் வளர்ச்சி மட்டுமே இருக்கும்
* தொகுதி மறுவரையறை ஆணையத்தின் பரிந்துரைகள், பார்லி.,யில் ஏற்கப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்த பிறகே நடைமுறைக்கு வரும். எனவே, 2029 வரை நடக்கும் எந்தவொரு தேர்தலிலும், தற்போதைய நிலையே தொடரும்
* லோக்சபாவில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத் திருத்தத்தை முறையாக செயல்படுத்தவும், சட்டசபை மற்றும் லோக்சபாவில் தொகுதிகளை சமமாக பிரிக்கவும் தொகுதி மறுவரையறை அவசியம்.
* மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, 1970களில் தென் மாநிலங்கள் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தின
* உ.பி., பீஹார், ம.பி., போன்ற வட மாநிலங்கள் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை கண்டுகொள்ளவே இல்லை. இதனால், அங்கு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது
* மக்கள் தொகையை மட்டுமே அளவுகோலாக வைத்து தொகுதிகளை பிரித்தால், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்கு அது தண்டனையாகவும், கட்டுப்படுத்த தவறிய வட மாநிலங்களுக்கு பரிசாகவும் அமையும்
* மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூற்றுப்படி, 50 சதவீத கூடுதல் இடங்கள் அதிகரித்தாலும், தென் மாநிலங்களை விட வட மாநிலங்களில் தான் தொகுதிகள் அதிகமாக உயரும்
* உதாரணத்திற்கு, உ.பி.,யில் தற்போதுள்ள 80 லோக்சபா தொகுதிகள் 120க்கு மேலாக உயர வாய்ப்புள்ளது. இதனால், லோக்சபாவில் ஒட்டுமொத்த தென் மாநிலங்களின் ஓட்டு பலம் குறைந்துவிடும்
* பார்லி.,யில் அரசியல் அதிகாரம் வட மாநிலங்கள் பக்கம் சாய்ந்தால், மத்திய நிதி ஆணையத்தின் நிதி பகிர்வு, திட்டங்கள் ஒதுக்கீடு போன்றவற்றில் தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்படலாம்
* மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காகவே இந்திரா, வாஜ்பாய் காலத்தில் தொகுதி எண்ணிக்கையை உயர்த்துவது முடக்கி வைக்கப்பட்டது
* தற்போது அந்த பாதுகாப்பை உதறி தள்ளிவிட்டு, மக்கள் தொகைக்கே முன்னுரிமை அளித்தால், அது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.