தோனி மீது புஜாராவுக்கு அப்படி என்ன வெறுப்பு? சிறந்த இந்திய அணியில் 3 ஸ்டார்களுக்கு இடம் அளிக்கவில்லை
தோனி மீது புஜாராவுக்கு அப்படி என்ன வெறுப்பு? சிறந்த இந்திய அணியில் 3 ஸ்டார்களுக்கு இடம் அளிக்கவில்லை
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவரான புஜாரா, தனது முன்னாள் சக வீரர்களைக் கொண்டு சிறந்த 11 பேர் கொண்ட விளையாடும் அணியை தேர்வு செய்துள்ளார். இதில் தோனி, ரோஹித் சர்மா மற்றும் அஜின்கியா ரஹானே போன்ற பல முக்கிய வீரர்களுக்கு அவர் இடம் அளிக்கவில்லை.
செட்டேஷ்வர் புஜாரா 2010 முதல் 2023 வரையிலான தனது 13 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 103 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த நிலையல், தனக்கு பிடித்தமான சிறந்த 11 வீரர்கள் பட்டியலை அவர் பகிர்ந்து கொண்டார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக இந்தியாவின் ஜாம்பவான் ராகுல் டிராவிட் மற்றும் அதிரடி வீரர் வீரேந்தர் சேவாக் ஆகியோரை புஜாரா தேர்வு செய்துள்ளார். பொதுவாக ராகுல் டிராவிட் 3-வது வரிசையில் விளையாடக்கூடியவர் என்றாலும், புஜாரா தன்னை 3-வது இடத்திற்கு தேர்வு செய்து கொண்டு, டிராவிட்டை தொடக்க வீரராக களம் இறக்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து 4 மற்றும் 5-வது இடங்களில் முறையே சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோரை தேர்வு செய்தத்துள்ளார். தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தில் பெரும்பாலான போட்டிகளில் உடன் விளையாடிய அஜின்கியா ரஹானேவை விடுத்து, 6-வது இடத்தில் வி.வி.எஸ். லட்சுமணுக்கு புஜாரா வாய்ப்பளித்துள்ளார்.
விக்கெட் கீப்பராக தோனிக்கு பதிலாக ரிஷப் பண்ட்டை புஜாரா தேர்வு செய்துள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் ரிஷப் பண்ட்டுடன் இணைந்து அமைத்த சிறந்த பார்ட்னர்ஷிப்கள் இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த தேர்வு மூலம், அவர் பெரும்பாலும் டெஸ்ட் போட்டிக்கான சிறந்த அணியையே மனதில் கொண்டு தேர்வு செய்துள்ளார் என்பது தெளிவாகிறது.
பந்துவீச்சுத் துறையில் இந்தியாவின் முன்னணி ஸ்பின்னர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோரைத் தேர்வு செய்துள்ளார். வேகப்பந்து வீச்சுக்கு ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகிய இருவரை மட்டுமே முதன்மை அணியில் வைத்துள்ளார்.
மேலும், 12-வது வீரராக வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவைத் தேர்ந்தெடுத்துள்ளார். ஆடுகளத்தின் தன்மை மற்றும் சூழலுக்கு ஏற்ப மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாட விரும்பினால், இஷாந்த் சர்மா அணியில் சேர்க்கப்படுவார் எனவும், தேவைப்பட்டால் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை பரிசீலிக்க வாய்ப்புள்ளது என்றும் புஜாரா குறிப்பிட்டுள்ளார்.