துலீப் கோப்பை 2026: தோனியை போல் டிஆர்எஸ் பயன்படுத்தி கெத்து காட்டிய வைபவ் சூர்யவன்ஷி
துலீப் கோப்பை 2026: தோனியை போல் டிஆர்எஸ் பயன்படுத்தி கெத்து காட்டிய வைபவ் சூர்யவன்ஷி
பெங்களூரு: துலீப் டிராபி 2026 தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியின் , ஈஸ்ட் ஜோன் அணியின் தற்காலிக கேப்டன் வைபவ் சூர்யவன்ஷி எடுத்த டிஆர்எஸ் முடிவால், சென்ட்ரல் ஜோன் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆர்யன் ஜூயல் ஆட்டமிழந்தார்.
சென்ட்ரல் ஜோன் இன்னிங்ஸின் 40-வது ஓவரின் இரண்டாவது பந்தில், முகேஷ் குமார் ஆஃப் சைடுக்கு வெளியே வீசிய பந்தை ஜூயல் அடிக்க முயன்று தவறவிட்டார். பந்து பேட்டுக்கு மிக அருகில் கடந்து சென்றதால் ஈஸ்ட் ஜோன் வீரர்கள் அவுட் கேட்டு முறையிட்டனர், ஆனால் நடுவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார்.
அன்றைய தினத்தின் தொடக்கத்தில் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக வழக்கமான கேப்டன் இஷான் கிஷன் ஃபீல்டிங் செய்யவில்லை. இதனால் தற்காலிக கேப்டனாக செயல்பட்ட வைபவ் சூர்யவன்ஷி, ரிவ்யூ எடுப்பதற்கான நேரம் முடிவடைய இன்னும் 3 விநாடிகளே இருந்த நிலையில் கடைசி தருணத்தில் டிஆர்எஸ் முறைக்கு சென்றார். அதில் பந்து பேட்டைக் கடக்கும்போது அல்ட்ரா எட்ஜில் ஸ்பைக் இருப்பது உறுதியானதை அடுத்து நடுவர் தனது முடிவை மாற்றிக்கொண்டார்.
துரதிர்ஷ்டவசமாக ஆர்யன் ஜூயல் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து, 113 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இவரது விக்கெட் வீழ்ந்தபோது சென்ட்ரல் ஜோன் அணி 39.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்திருந்தது.
முதலில் பேட்டிங் செய்த சென்ட்ரல் ஜோன் அணிக்கு ஆரம்பம் சிறப்பானதாக அமையவில்லை. அமன் மோக்டே 8 ரன்களிலும், குணால் சண்டேலா 6 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ரஜத் படிதாரும் பெரிய அளவில் சோபிக்காமல் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜூயல் நான்காவது விக்கெட்டாக 46 ரன்களுக்கு ஆட்டமிழந்ததை அடுத்து, சென்ட்ரல் ஜோன் அணி 99 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய யாஷ் ரத்தோடும் தன் பங்கிற்கு 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் சென்ட்ரல் ஜோன் அணி 45 ஓவர்களில் 125 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதனைத் தொடர்ந்து விக்கெட் சரிவைத் தடுத்து நிறுத்த ஜோடி சேர்ந்த ரிங்கு சிங் மற்றும் ஹர்ஷ் துபே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 54 ஓவர்கள் முடிவில் சென்ட்ரல் ஜோன் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ரிங்கு சிங் 36 ரன்களுடனும், ஹர்ஷ் துபே 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.